ராஜபாளையம் அரசு மகப்பேறு மருத்துவமனை முன்பு தற்காலிக பேருந்து நிறுத்தத்தால் போக்குவரத்து நெரிசல்

ராஜபாளையம்: ராஜபாளையம் காந்தி சிலை சந்திப்பு அருகே சாலையின் இருபுறமும் செயல்படும் தற்காலிக பேருந்து நிறுத்தத்தால் அரசு மகப்பேறு மருத்துவமனை முன்பு கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு பொதுமக்கள் சிரமத்திற்கு ஆளாகின்றனர்.

ராஜபாளையம் புதிய பேருந்து நிலையத்தில் இருந்து வெளியூர் மற்றும் பிற மாவட்டங்களுக்கு செல்லும் புறநகர் பேருந்துகளும், பழைய பேருந்து நிலையத்தில் இருந்து ஊரக பகுதிகளுக்கு செல்லும் நகர் பேருந்துகளும் இயக்கப்பட்டு வந்தது.

ராஜபாளையம் – சத்திரப்பட்டி சாலையில் ரயில்வே மேம்பாலப் பணி நடைபெற்று வருவதால், டி.பி.மில்ஸ் சாலையில் போக்குவரத்து தடை செய்யப்பட்டு கடந்த 4 ஆண்டுகளாக அனைத்துப் பேருந்துகளும் பழைய பேருந்து நிலையம் வழியாக சென்று வருகிறது.

இந்நிலையில், ரூ.2.90 கோடி மதிப்பில் மேம்படுத்தும் பணிகள் தொடங்கியதால் கடந்த 18-ம் தேதி முதல் பழைய பேருந்து நிலையம் மூடப்பட்டது. இதையடுத்து பழைய பேருந்து நிலையத்தில் இருந்து இயக்கப்பட்ட பேருந்துகள், புதிய பேருந்து நிலையத்தில் இருந்து இயக்கப்படும் என நகராட்சி நிர்வாகம் அறிவித்தது.

தற்போது காந்தி சிலை சந்திப்பு அருகே அரசு மகப்பேறு மருத்துவமனை முன் தற்காலிக பேருந்து நிறுத்தம் செயல்பட்டு வருகிறது. மருத்துவமனை முன் சாலையின் இருபுறமும் பேருந்துகளை நிறுத்தி பயணிகளை ஏற்றி இறக்குவதால் அப்பகுதியில் கடும் போக்குவரத்து செயல் ஏற்படுகிறது. மதுரை – கொல்லம் தேசிய நெடுஞ்சாலையில் செல்லும் வாகனங்கள் அனைத்தும் வழியாகவே செல்வதால் மருத்துவமனைக்குச் செல்பவர்கள் மற்றும் பாதசாரிகள் சாலையை கடப்பதற்கு நீண்ட நேரம் காத்திருக்கும் சூழல் நிலவுகிறது.

பேருந்து நிறுத்தம் மற்றும் போக்குவரத்து நெரிசல் காரணமாக மகப்பேறு மருத்துவமனையின் வடக்கு பகுதி நுழைவு வாயில் மூடப்பட்டு, தெற்கு நுழைவு வாயில் வழியாகவே ஆம்புலன்ஸ்கள் உள்ளிட்ட அனைத்து வாகனங்களும் மருத்துவமனைக்கு வந்து செல்கின்றன. மருத்துவமனையின் தெற்கு நுழைவு வாயிலானது நான்கு ரோடுகள் சந்திக்கும் இடத்தில் அமைந்துள்ளதால் ஆம்புலன்ஸ்கள் மருத்துவமனைக்கு வந்து செல்வதில் சிரமம் நிலவுகிறது.

மேலும், இந்த தற்காலிக பேருந்து நிறுத்தம் பகுதியில் பயணிகளுக்கான நிழற்குடை குடிநீர் கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் ஏதும் இல்லாததால் மக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகின்றனர்.

இது குறித்து பொதுமக்களிடம் கேட்டபோது, ”ராஜபாளையம் ஜவகர் மைதானம் பகுதியில் நகர் பேருந்துகளுக்கு தற்காலிகப் பேருந்து நிலையம் ஏற்படுத்த வேண்டும். மேலும் மகப்பேறு மருத்துவமனை முன் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் சாலையின் இருபுறமும் ஒரே இடத்தில் பேருந்துகளை நிறுத்தாமல் வெவ்வேறு இடத்தில் பேருந்துகளை நிறுத்துவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பழைய பேருந்து நிலைய பணிகள் நிறைவடைய ஓராண்டாகும் என நகராட்சி நிர்வாகம் அறிவித்துள்ள நிலையில் நிழற்குடை, குடிநீர், கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகளை பேருந்து நிலையத்தில் ஏற்படுத்த வேண்டும்” என ராஜபாளையம் நகராட்சி மற்றும் போக்குவரத்து காவல்துறைக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.