பண மோசடி வழக்கில் பிரபல வில்லன் நடிகர் பாபுராஜை காவல்துறையினர் கைது செய்து பின்னர் பிணையில் விடுவித்தனர்.
மலையாள திரையுலகில் 25 வருடங்களுக்கும் மேலாக நடித்து வரும் பாபுராஜ், தமிழில் ஸ்கெட்ச், வீரமே வாகை சூடும் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். அவரை மோசடி வழக்கு ஒன்றில் கேரள காவல்துறையினர் கைது செய்தனர்.
பாபுராஜுக்கு மூணாறு பகுதியில் சொகுசு ரிசார்ட் ஒன்று உள்ளது. இதை கடந்த 2020ஆம் ஆண்டு அருண் என்பவர் 40 லட்ச ரூபாய் முன்பணம் கொடுத்து மாதம் 3 லட்ச ரூபாய் வாடகை என்று ஒப்பந்தம் செய்து கொண்டார்.
சில நாட்களிலேயே கொரோனா காரணமாக பல மாதங்கள் ரிசார்ட் செயல்படாமல் இருந்தது. நிலைமை சரியானதும், ரிசார்ட்டை மீண்டும் நடத்த முயற்சித்தபோது தொழில்நுட்ப ரீதியாக பல பிரச்னைகள் இருந்தன. அதை சரி செய்து தர பாபுராஜ் மறுத்துவிட்டார்.
அதுமட்டுமல்லாமல் ரிசார்ட் அந்தப்பகுதியில் உள்ள வேறு ஒரு அமைப்புக்கு சொந்தமான நிலத்தை ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்ததால் வருமான வரி துறையினர் அந்த நிலத்தை மீட்கும் முயற்சியில் இறங்கினர்.
இதனை அறிந்த அருண் தான் கொடுத்த 40 லட்ச ரூபாய் முன்பணத்தை திரும்ப கேட்டுள்ளார். ஆனால் பாபுராஜ் பணத்தை திருப்பிக் கொடுக்க மறுக்கவே, அவர் மீது அடிமாலி காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.
முன்ஜாமீன் பெற்ற பாபுராஜ், அதன்பிறகு நீதிமன்றம் குறிப்பிட்ட தேதியில் போலீஸ் விசாரணைக்கு ஆஜராகவில்லை. இந்நிலையில் பிப்ரவரி நான்காம் தேதி போலீசார் முன்னிலையில் மீண்டும் விசாரணைக்கு ஆஜராக பாபுராஜூக்கு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
அப்படி விசாரணைக்கு வந்தபோது பாபுராஜை காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார். அதன்பிறகு அடிமாலி மாஜிஸ்ட்ரேட் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு பின்னர் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டார்.
newstm.in