ராமநாதபுரம் அருகே ஆட்டோ மீது கார் மோதிய விபத்தில் பிரசவம் முடிந்து வீடு திரும்பிக் கொண்டிருந்த தாய்-சேய் உள்பட 4 பேர் உயிரிழந்துள்ளனர்.
ராமநாதபுரம் மாவட்டம், வேதாளை கிராமத்தை சேர்ந்தவர் சுமதி (வயது 25). கடந்த வெள்ளிக்கிழமை ராமநாதபுரம் அரசு தலைமை மருத்துவமனையில் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்ட இவருக்கு ஆண் குழந்தை பிறந்தது.
இதனையடுத்து மூன்றாவது நாளான இன்று சுமதி, ஆண் குழந்தை, கணவர் சின்ன அடைக்கான் (வயது 28), அவரின் தாயார் காளியம்மாள் (வயது 50) ஆகியோருடன் ஆட்டோவில் மருத்துவமனையிலிருந்து வேதாளைக்கு திரும்பிக் கொண்டிருந்தனர்.
மதுரை-ராமேசுவரம் தேசிய நெடுஞ்சாலையில் நதிப்பாலம் அருகே ஆட்டோ வந்து கொண்டிருந்தபோது, எதிரே ராமேசுவரத்திலிருந்து சென்னை சென்று கொண்டிருந்த இன்னோவா கார் கட்டுப்பாட்டை இழந்து ஆட்டோ மீது மோதியது.
இந்த கொடூர விபத்தில் வித்தானூரைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் மலைராஜ் மற்றும் சுமதி சம்பவ இடத்திலேயே பலியாகினர். படுகாயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவனையில் அனுமதிக்கப்பட்ட மூன்றே நாட்களே ஆண் குழந்தை, தந்தை சின்ன அடைக்கான் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.
மற்றொரு வாகனத்தை ஓவர் டேக் செய்ய முயன்ற போது இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. விபத்தை ஏற்படுத்திய சென்னை சேலையூர் பகுதியைச் சேர்ந்த கார் ஓட்டுநர் விக்னேஷ் (வயது 34) என்பவரை கைது செய்தனர்.