உத்திரமேரூர்: உத்திரமேரூர் அடுத்த இளநகர் கிராமத்தில் விவசாயிகளுக்கு மண்வெட்டி, கடப்பாரை, களைவெட்டி, கதிர் அரிவாள், பானல், நெல் நடவு செய்யும் கருவி உள்ளிட்ட உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. மாவட்ட வேளாண் இணை இயக்குனர் இளங்கோவன் தலைமை வகித்தார். திட்ட இயக்குனர் கவிதா, ஊரக வளர்ச்சி திட்ட செயற்பொறியாளர் ராஜராஜன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் வரதராஜன், லோகநாதன், வட்டாட்சியர் குணசேகரன் முன்னிலை வகித்தனர். ஊராட்சி தலைவர் மேனகா வரவேற்றார்.
நிகழ்ச்சியில் கலெக்டர் ஆர்த்தி, விவசாயிகளுக்கு மண்வெட்டி, கடப்பாரை, களைவெட்டி, அரிவாள், பானல் உள்ளிட்ட உபகரணங்களை வழங்கினார். மேலும் விவசாயிகளிடம் குறைகளை கேட்டறிந்தார். அப்போது, விவசாயிகள், ‘இளநகர் கிராமத்தில் நெல் மூட்டை சேமிப்பு கிடங்கு தேவை’ என கோரிக்கை விடுத்தனர். விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் உறுதியளித்தார். நிகழ்ச்சியில் அரசு அலுவலர்கள் உள்ளாட்சி பிரதிநிதிகள் பலர் கலந்து கொண்டனர்.