தமிழக மணல் மற்றும் எம்சாண்ட் லாரி உரிமையாளர்கள் ஒருங்கிணைந்த நல சம்மேளனத்தின் மாநில இணைச் செயலாளர் ஆர்.கோபாலகிருஷ்ணன் மற்றும் தமிழ்நாடு மணல் மற்றும் எம்-சாண்ட் லாரி உரிமையாளர்கள் ஒருங்கிணைந்த நல சம்மேளனத்தின் மாநில துணைத் தலைவர் பி.கைலாசம் இருவரும் செய்தியாளர்களிடம் பேசிய போது, “6 சக்கரங்களை கொண்ட மணல் லாரிகளுக்கு 8 பக்கெட் மணலை ₹.7,500-க்கு வழங்க வேண்டும்.
10 சக்கரம் கொண்ட வாகனங்களுக்கு 13 பக்கெட் மணலை ₹.14,000-க்கு அரசு கொடுக்க வேண்டும். அத்துடன், அரசு அதிகப்படியான மணல் குவாரிகளை திறக்க வேண்டும். இதுபோல, எங்கள் லாரி உரிமையாளர்களுக்கு மணல் வழங்கப்பட்டால் மக்களுக்கு இன்னும் மலிவான விலையில் மணலை எங்களால் விநியோகம் செய்ய முடியும்.
இதை அரசும், மணல் குவாரி உரிமையாளர்களும் உடனடியாக அமல்படுத்த வேண்டும். மணல் லாரி சம்மேளனம், அதிகப்படியான லோடு ஏற்றுவதை நிச்சயம் அனுமதிக்காது. கரூர், சேலம், திருச்சி பகுதிகளில் தரமில்லாத முறையில் எம்சாண்ட் தயாரித்து அதில் பவுடரை கலந்து விற்கின்றார்கள்.
இதனால், கட்டிடங்கள் மவுலிவாக்கத்தில் இடிந்து விழுந்ததை போல இடிந்து விழும் அபாயம் இருக்கின்றது. ஆற்றில் அதிகப்படியாக மணல் இருக்கின்ற காரணத்தால் கர்நாடக மாநிலத்தை போல தமிழகத்திலும் எம்சாண்ட் குவாரிகளை உடடே நிறுத்த வேண்டும். இதன் காரணமாக மலைகள் காணாமல் போய், சுற்றுச்சூழல் பெரியளவில் பாதிக்கப்படுகிறது.
இந்த அச்சுறுத்தல்களால் வனத்தில் இருக்கின்ற விலங்குகள் ஊருக்குள் வந்து விடுகின்றன. இப்படி அதிகளவில் பாறைகளை உடைகின்ற காரணத்தால், தமிழகத்தில் பூகம்பம் ஏற்பட கூட வாய்ப்புகள் இருக்கின்றன.”என்று கூறியுள்ளனர்.