பெங்களூருவில் நடந்த ஜி-20 ஆலோசனை கூட்டத்தில் ரஷ்ய அதிகாரிகளுக்கு மிரட்டல்?: கனடா, ஜெர்மன் மீது பகீர் குற்றச்சாட்டு

புதுடெல்லி: பெங்களூருவில் நடந்த ஜி-20 நிதியமைச்சர்கள் ஆலோசனை கூட்டத்தில் ரஷ்ய அதிகாரிகளை கனடா, ஜெர்மன் அதிகாரிகள் மிரட்டியதாக பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளது. ஜி-20 அமைப்பிற்கு இந்தியா தலைமை ஏற்றுள்ள நிலையில், வரும் மார்ச் 1  மற்றும் 2 ஆகிய தேதிகளில் டெல்லியில் ஜி-20 வெளியுறவு அமைச்சர்கள் கூட்டம்  நடைபெற உள்ளது.

இதில் ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சர் செர்ஜி லாவ்ரோவும்,  அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் அந்தோணி பிளிங்கனும் கலந்து  கொள்கிறார்கள். இந்நிலையில் சமீபத்தில் பெங்களூருவில் ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நடந்து முடிந்த ஜி-20 நிதி அமைச்சர்கள் ஆலோசனை கூட்டத்தின் போது கனடா, ஜெர்மன் நாட்டை சேர்ந்த அதிகாரிகள் சிலர், ரஷ்ய அதிகாரிகளை மிரட்டியதாக புகார்கள் எழுந்துள்ளன.

இதுகுறித்து ஆலோசனை கூட்ட வட்டாரங்கள் கூறுகையில், ‘ரஷ்யா நாட்டு அதிகாரிகளிடம், கனடா மற்றும் ஜெர்மன் நாட்டை சேர்ந்த அதிகாரிகள் சிலர், ‘நீங்கள் யார்? நீங்கள் எங்கு வசிக்கிறீர்கள்? உங்களை எப்படி கண்டுபிடிப்பது என்பது எங்களுக்குத் தெரியும். உக்ரைன் உடனான மோதலை மறக்க மாட்டோம்’ என்று கூறினர்’ என்று தெரிவித்தன.

அதேநேரம் இந்த தகவலை கனடா, ஜெர்மன் அதிகாரிகள் உறுதிபடுத்தவில்லை. ஆனால் ரஷ்ய அதிகாரிகள் தரப்பில் கூறுகையில், ‘அமைதியை பற்றி மேற்கத்திய நாடுகள் பேசும்போது, அவர்கள் கொஞ்சம் பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும். இதுபோன்ற உயர்மட்ட கூட்டத்தில் அச்சுறுத்தலை ஏற்படுத்தும் வகையில் பேசும் பேச்சை நாங்கள் யாருமே எதிர்பார்க்கவில்லை’ என்றனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.