மிகப்பெரிய அளவில் பணம் விளையாடி வரும் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலை ரத்து செய்ய வேண்டும் என்று, தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு ஐஏஎஸ் அவர்களை சந்தித்து அறப்போர் இயக்கம் புகார் அளித்துள்ளது.
சத்தியபிரதா சாகுவிடம் அளிக்கப்பட்ட அந்த புகார் மனுவில் அறப்போர் இயக்கம் தெரிவித்திருப்பதாவது, “ஈரோடு கிழக்குத் தொகுதியில் வாக்காளர்களுக்கு ஏராளமான பணம் கொடுக்கப்பட்டு இருக்கிறது.
பணம் மட்டும்மில்லாமல், குக்கர், கொலுசு, புடவை, வாட்ச் என அரசியல் கட்சிகள் தரப்பில் ஏராளமான பரிசுப் பொருட்கள் வாக்காளர்களுக்கு வாரி வழங்கப்பட்டுள்ளது.
இப்படி அரசியல் கட்சியினர் பரிசுப் பொருள்கள் மற்றும் பணம் கொடுப்பதை விடியோ எடுக்கும் ஊடகவியலாளர்களும் தாக்கப்பட்டுள்ளனர்.
எனவே, இடைத்தேர்தல் ஜனநாயக முறைப்படி, மக்கள் சுயமாக வேட்பாளரை தேர்வு செய்யும் வகையில் நடைபெற வாய்ப்பில்லை.
பண சக்திதான் இந்த இடைத்தேர்தலை இயக்கும். எனவே, இடைத்தேர்தலை ரத்து செய்ய வேண்டும்” என்று அறப்போர் இயக்கம் வலியுறுத்தியுள்ளது.