எங்களுக்கும் மோடி போன்று பிரதமர் வேண்டும்: பாகிஸ்தான் இளைஞரின் விருப்பம்

இஸ்லாமாபாத்,

இலங்கையை போலவே பாகிஸ்தான் கடுமையான பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டு வருகிறது. அத்தியாவசிய பொருட்களின் விலை விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்துள்ளது. இதனால் அந்த நாட்டு மக்கள் அரசு மீது கடும் அதிருப்தியில் உள்ளனர்.

இந்த நிலையில் பாகிஸ்தானை சேர்ந்த பெண் பத்திரிகையாளர் சனா அம்ஜத் என்பவர் இளைஞர் ஒருவரிடம் பேட்டி கண்ட வீடியோவை யூடியூப்பில் வெளியிட்டார்.

வீடியோவில் அந்த இளைஞர், இந்திய பிரதமர் நரேந்திர மோடி, பாகிஸ்தானின் பிரதமராக இருந்தால் நாட்டில் இந்த நிலைமை ஏற்பட்டிருக்காது எனவும் பாகிஸ்தானுக்கு மோடியை போன்று பிரதமர் வேண்டும் என்றும் பேசியிருந்தார்.

பாகிஸ்தான் இளைஞர் மோடியை புகழ்ந்து பேசும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானது.

இந்த நிலையில், அந்த இளைஞர் பிரதமர் மோடியை பாராட்டி பேசும் மற்றொரு வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் அதிக அளவில் பகிரப்பட்டு வருகிறது. அந்த வீடியோவில் இளைஞர் பேசியிருப்பதாவது:-

என்னுடைய முதல் பேட்டிக்கு பிறகு சிலர் என்னிடம் ஒரு பாகிஸ்தானியராக இந்த கருத்துகளை நான் கூறியிருக்கக் கூடாது என்று சொன்னார்கள். ஆனால் மோடி குறித்து நான் பேசியது அனைத்தும் உண்மை.

கடந்த 8 ஆண்டுகளில் மோடி தனது நாட்டை சரிசெய்து புதிய உச்சத்திற்கு கொண்டு சென்றுள்ளார், முன்பு இந்தியாவையும் பாகிஸ்தானையும் ஒப்பிடுவார்கள், ஆனால் இப்போது ஒப்பிட முடியாது. வெளிநாடுகளிலும் இந்தியர்கள் சிறப்பாக செயல்பட்டு வருகின்றனர். மோடி தனது நாட்டிற்காக உழைத்துள்ளார்.

எனக்கு மோடி பிடிக்கும். நான் அவரை நேசிக்கிறேன். நமக்கு மோடி கிடைத்திருந்தால், நவாஸ் ஷெரீப், பெனசிர் புட்டோ, இம்ரான்கான் போன்ற பிரதமர்கள், பர்வேஸ் முஷாரப் போன்ற அதிபர்கள் தேவைப்பட்டிருக்க மாட்டார்கள் என்று அந்த இளைஞர் பேசினார்.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.