பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா: புதுச்சேரிக்கு வர இருந்த துணை ஜனாதிபதி வருகை திடீரென ரத்து!

புதுச்சேரி: பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் கலந்துகொள்வதற்காக புதுச்சேரிக்கு வர இருந்த துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கரின் வருகை திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளது. புதுச்சேரி பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா நாளை மறுதினம் செவ்வாய்க்கிழமை (28.02.2023) அன்று நடத்த பல்கலைக்கழக நிர்வாகம் திட்டமிட்டிருந்தது.

இந்த விழாவில் துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கர் கலந்துகொண்டு மாணவர்களுக்கு பட்டங்களை வழங்குவதாக அறிவிக்கப்பட்டு இருந்தது. துணை ஜனாதிபதியாக பதவியேற்ற பின் முதன் முதலாக வருவதால் அவரது வருகைக்கான ஏற்பாடுகளை புதுச்சேரி அரசு தீவிரமாக செய்தது. அதற்காக காவல்துறை அதிகாரிகளும் பாதுகாப்பு ஏற்பாடுகள் தொடர்பாக ஆய்வு நடத்தினர்.

இந்தநிலையில் துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கரின் புதுச்சேரி வருகை திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளது. நிர்வாக பிரச்சினைகள் காரணமாக அவர் வரவில்லை என்று கூறப்படுகிறது. இதற்கிடையே திட்டமிட்டபடி அதே நாளில் பட்டமளிப்பு விழாவினை நடத்த பல்கலைக்கழக நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வருவது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.