போதையில் லாரி ஓட்டி 4 உயிர்களை காவு வாங்கிய குடிகார ஓட்டுனர்..! சாலையில் சிதறிய உடல்கள்

சேலம் மாவட்டம் ஜலகண்டாபுரம் அருகே தறிகெட்டு ஓடிய லாரி சாலையோரம் சென்ற இருசக்கர வாகனங்களில் அடுத்தடுத்து மோதியதால் 4 பேர் உடல் நசுங்கி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. லாரி ஓட்டுனரின் குடிபோதையால் 4 உயிர்கள் காவு வாங்கப்பட்ட பின்னனி குறித்து விவரிக்கின்றது இந்த செய்தி தொகுப்பு…

சேலம் மாவட்டம் ஜலகண்டாபுரத்தில் இருந்து தேங்காய் பாரம் ஏற்றிய லாரி ஒன்று தாரமங்கலம் நோக்கி சென்று கொண் டிருந்தது. இந்த சரக்கு லாரியை அரியலூர் பகுதியை சேர்ந்த காட்டுராஜா என்பவர் ஓட்டிச் சென்றார். அந்த லாரி செலவடை என்ற கிராமத்தை கடந்த போது தறிகெட்டு ஓடத்தொடங்கியது. தாறுமாறாக சென்ற அந்த லாரி சாலையோரம் சென்ற இரு சக்கரவாகனங்கள் மீது பயங்கரமாக மோதியது.

இதில் மூன்று இருசக்கர வாகனங்கள் மீது அடுத்தடுத்து பலமாக மோதிச்சென்றது. இதில் இருசக்கர வாகனங்களில் பயணம் செய்த பாலகிருஷ்ணன், சந்தோஷ், சாந்தி, ஒன்றரை வயது பெண் குழந்தை உள்ளிட்ட 4 பேர் சம்பவ இடத்திலேயே உடல் சிதைந்து பலியாகினர்.

இந்த விபத்தில் மேலும் சிலருக்கு காயம் ஏற்பட்டதன் காரணமாக அவர்கள் உடனடியாக அருகில் இருந்த அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். விபத்து காரணமாக சேலம் தாரமங்கலம் சாலையில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
சம்பவம் பற்றி தகவல் அறிந்தவுடன் அங்கு சென்று விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர் விபத்தை ஏற்படுத்திய சரக்கு லாரி ஓட்டுனர் காட்டுராஜாவை கைது செய்து காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர்.

விபத்தை ஏற்படுத்திய ஓட்டுநர் காட்டுராஜா மது போதையில் இருந்ததாகவும், விபத்து நடைபெற்ற இடத்திற்கு சிறிது தூரத்திற்கு முன்பாகவே அவர் நிலை தடுமாறியதால் லாரி தறிகெட்டு ஓடியதாககவும், போதை அதிகமானதால் இந்த கோர விபத்து நடந்ததும் தெரியவந்துள்ளதாக போலீசார் தெரிவித்தனர். கைது செய்யப்பட்ட ஓட்டுனர் காட்டுராஜாமீது கொலை வழக்கிற்கு இணையான விபத்து வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.