ரஷியா மீது கூடுதல் பொருளாதார தடைகள் விதிக்க 'ஜி7' நாடுகளின் தலைவர்கள் முடிவு

டோக்கியோ,

உக்ரைன் நாட்டின் மீது ரஷியா நடத்தி வரும் போர் ஓர் ஆண்டை நிறைவு செய்ய உள்ளதையொட்டி உக்ரைனுக்கு 5.5 பில்லியன் அமெரிக்க டாலர் (சுமார் ரூ.45 ஆயிரத்து 487 கோடி) நிதியுதவி வழங்குவதாக ஜப்பான் நாட்டின் பிரதமர் புமியோ கிஷிடா அறிவித்தார்.

டோக்கியோவில் நடைபெற்ற உலகளாவிய மன்றத்தில் பங்கேற்று பேசியபோது இதுப்பற்றி அவர் கூறுகையில், “உக்ரைன் இன்னும் ரஷிய படையெடுப்பின் கீழ் பாதிக்கப்பட்டுள்ளது. ரஷிய தாக்குதல்களால் மோசமாக பாதிக்கப்பட்ட உக்ரைன் மக்களின் அன்றாட வாழ்க்கை மற்றும் உள்கட்டமைப்பை மீண்டும் கட்டியெழுப்ப அவர்களுக்கு உதவி தேவை. எனவே உக்ரைனுக்கு 5.5 பில்லியன் டாலர் நிதியுதவியை ஜப்பான் வழங்குகிறது. மேலும் போர் ஓர் ஆண்டை நிறைவு செய்வதை குறிக்கும் வகையில் 24-ந் தேதி உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி பங்கேற்புடன் ஜி-7 மாநட்டை நடத்த முடிவு செய்துள்ளேன்” என கூறி இருந்தார்.

இந்நிலையில் உக்ரைன் போர் ஓர் ஆண்டை நிறைவு செய்ததையொட்டி ஜப்பான் பிரதமர் புமியோ கிஷிடா தலைமையில் ‘ஜி7’ நாடுகள் தலைவர்களின் மாநாடு காணொலி காட்சி வாயிலாக நடந்தது.

இதில் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியும் பங்கேற்றார். இந்த கூட்டத்தில் ரஷியா மீது கூடுதல் பொருளாதார தடைகளை விதிக்க ‘ஜி7’ நாடுகளின் தலைவர்கள் முடிவு செய்தனர்.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.