Video: காண்டான காண்டாமிருகங்கள்… சண்டையை போட்டோ எடுத்த பயணிகளை ஓடவிட்ட சம்பவம்!

One Horn Rhinos Attack Viral Video: மேற்கு வங்கத்தில் உள்ள ஜல்தபாரா தேசிய பூங்காவில், ஏழு சுற்றுலாப் பயணிகள் சாஃபாரிக்கு சென்ற வாகனம் மீது இரண்டு காண்டாமிருகங்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர். சஃபாரி அனுபவத்தை  அனுபவிக்க உற்சாகமாக இருந்த ஏழு சுற்றுலா பயணிகள் ஜீப்பில் ஏறி காட்டுக்குள் சென்றனர்.

அந்த பூங்காவில், புகழ்பெற்ற ஒற்றைக் கொம்பு காண்டாமிருகத்தை பார்த்தே ஆக வேண்டும் என விருப்பத்துடனும் இருந்தனர். அப்போது, சாலையில் சென்றுகொண்டிருந்தபோது, சாலையை ஒட்டியிருந்த புதர்களின் விலங்குகளின் நடமாட்டத்தை அவதானித்துள்ளனர். அப்போது, அங்கு இரண்டு காண்டாமிருகங்கள் கடுமையான சண்டையில் ஈடுபட்டுள்ளன. சுற்றுலாப் பயணிகள் விரைவாக தங்கள் கேமராவில் அந்த தருணத்தைப் படம்பிடித்தனர். ஆனால், இது அவர்களுக்கே ஆபத்தாக மாறும் என்பதை அவர்கள் அறிந்திருக்கவில்லை.

சுற்றுலாப் பயணிகள் புகைப்படம் எடுப்பதிலும், வீடியோ எடுப்பதிலும் மும்முரமாக இருந்ததால், காண்டாமிருகங்களின் கவனம் ஜீப்பின் பக்கம் திரும்பியதையும் அவர்கள் கவனிக்க தவறிவிட்டனர். அங்கிருந்த யாரும் அதை அறியும் முன், இரண்டு காண்டாமிருகங்களும் அந்த சஃபாரி ஜீப்பை நோக்கிச் சென்றன. ஓட்டுநர் கமல் காசி, கார் என்ஜினை ஸ்டார்ட் செய்து தப்பிக்க முயன்றார். ஆனால் ஜீப் சாலையை விட்டு விலகி சாலையை ஒட்டியுள்ள குறுகியப் பள்ளத்தில் விழுந்தது.

கார் அந்த குறுகிய பள்ளத்தில் விழுந்தது கடுமையான பாதிப்பை ஏற்படுத்தியது. ஏழு சுற்றுலாப் பயணிகளும் காயமடைந்தனர் என்று கூறப்படுகிறது. சிலருக்கு எலும்பு முறிவு ஏற்பட்டது. மற்றவர்களுக்கு காயங்கள் மற்றும் சிறுவெட்டு காயங்கள் இருந்தன. ஓட்டுநர் கமல் காசிக்கு சிறிய காயங்கள் ஏற்பட்டன. ஆனால் சம்பவத்தின் அதிர்ச்சி அவர்களை விட்டு விலகவேயில்லை.

வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து காயமடைந்த சுற்றுலா பயணிகளை, மேற்கு வங்கத்தின் மதரிஹாட் சுகாதார மையத்திற்கு அனுப்பி வைத்தனர். அவர்களில் 2 பேரின் நிலை கவலைக்கிடமாக இருந்ததால் அலிபுர்தார் மாவட்ட மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். ஜல்தபாரா தேசிய பூங்காவில் இதுவரை சுற்றுலா வாகனங்களை நோக்கி, காண்டாமிருகங்கள் மோதியதாக புகார் எழுந்ததில்லை என்பதால் அதிகாரிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

இந்த சம்பவம் அனைவருக்கும் ஒரு எச்சரிக்கையை கொடுத்துள்ளது. மேலும் பூங்கா அதிகாரிகள் இப்போது வனவிலங்குகளிடம் இருந்து பாதுகாப்பான தூரத்தை சுற்றுலா பயணிகள் கடைபிடிக்குமாறு எச்சரிக்கும் எச்சரிக்கை பலகைகளை வைத்துள்ளனர். நீண்ட காலமாக இந்தத் தொழிலில் ஈடுபட்டு வரும் ஓட்டுநர் கமல் காசி, இது போன்றதொரு நிலையை இதுவரை சந்தித்ததில்லை என்று தனது அதிர்ச்சியைத் தெரிவித்தார். யாரின் உயிருக்கும் ஆபத்து ஏற்படாதது அதிர்ஷடம் என்றும் அவர் கூறினார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.