இளையராஜாவை சந்தித்த நாக சைதன்யா நெகிழ்ச்சி

நாக சைதன்யா நடிக்கும் கஸ்டடி படத்தை வெங்கட்பிரபு இயக்குகிறார். தெலுங்கு, தமிழில் தயாராகும் இந்த படத்தில் கீர்த்தி ஷெட்டி கதாநாயகியாக நடிக்கிறார். அரவிந்த் சுவாமி வில்லனாக நடிக்க பிரியாமணி வலுவான ஒரு கதாபாத்திரத்தில் நடிக்கிறார். மேலும், சரத்குமார், சம்பத் ராஜ், ப்ரேம்ஜி, வெண்ணிலா கிஷோர், ப்ரேமி விஷ்வநாத் உள்ளிட்டப் பலர் நடிக்கின்றனர். படத்திற்கு இளையராஜாவும், யுவன் சங்கர் ராஜாவும் இணைந்து இசை அமைக்கிறார்கள். இதன் படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவடைந்துள்ள நிலையில், போஸ்ட் புரொடக்ஷன் பணிகளில் படக்குழு தற்போது ஈடுபட்டுள்ளது.

இந்த நிலையில் இளையராஜா தனது இசை நிகழ்ச்சிக்காக ஐதராபாத் சென்றுள்ளார். அவரை நாக சைதன்யா உள்ளிட்ட கஸ்டடி படக் குழுவினர் சந்தித்தனர். இது குறித்து நாக சைதன்யா தனது டுவிட்டரில் எழுதியிருப்பதாவது: மாஸ்ட்ரோ இளையராஜாவை சந்தித்தபோது என் முகத்தில் எவ்வளவு பெரிய புன்னகை. அவரது இசை என் வாழ்க்கையில் பல தருணங்களில் முக்கியமானதாக இருந்திருக்கிறது. அவரது இசை ரெபரன்ஸ் கொண்டு பல காட்சிகளையும், கதையையும் எனக்குள் நானே கற்பனை செய்து பார்த்திருக்கிறேன். இப்போது கஸ்டடிக்கு அவரே இசையமைத்து இருக்கிறார். உண்மையில் நான் ஆசீர்வதிக்கப்பட்டவன்தான். என எழுதியுள்ளார்.

நாக சைதன்யா நடித்தப் படங்களிலேயே அதிக பட்ஜெட்டில் தயாராகும் படம் கஸ்டடி. ஸ்ரீனிவாசா சித்தூரி இந்தப் படத்தை ஸ்ரீனிவாசா சில்வர் ஸ்கிரீன் பேனரின் கீழ் தயாரித்துள்ளார். எஸ்.ஆர் கதிர் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். வருகிற மே 12ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.