
மேகாலயா, திரிபுரா மற்றும் நாகாலாந்து ஆகிய மாநிலங்களுக்கு அண்மையில் தேர்தல் நடந்து முடிந்தன. திரிபுராவில் கடந்த மாதம் 16 ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்றது. மேகாலயா மற்றும் நாகாலாந்தில் கடந்த மாதம் 27 ஆம் தேதி தேர்தல் நடந்தது.
இந்நிலையில் திரிபுராவில் பாஜக கூட்டணி மீண்டும் ஆட்சியை தக்கவைத்துக் கொண்டது. இதற்கு முக்கிய காரணமாக அம்மாநில முதல்வர் மாணிக் சஹாவின் மிகப்பெரிய பங்கு என்று கூறுகின்றனர். அவரே இந்த முறையும் முதல்வராக தேர்வு செய்யப்படுவார் என்று கூறப்பட்டு வரும் நிலையில், பாஜக தேசிய தலைமை புதிய மாற்றத்தை பரிசீலித்து வருவதாக ஊகங்கள் எழுந்துள்ளன. திரிபுரா மாநிலத்தில் முதன் முதலாக பெண் ஒருவரை முதல்வராக தேர்வு செய்ய உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
திரிபுரா மாநில முதல்வர் பதவிக்கு ஒன்றிய சமூக நலத்துறை இணை அமைச்சர் பிரதிமா பவுமிக்கின் பெயரை பாஜக தலைமை பரிசீலித்து வருகிறது. அவ்வாறு பெண் முதல்வரின் பெயரை தலைமை அங்கீகரித்தால், அது வடகிழக்கு மாநில வரலாற்றில் முதல் முறையாக பெண் ஒருவரை முதல்வராக்கிய பெருமை பாஜகவை சென்றடையும்.