டாஸ்மாக் கடையில் மது அருந்திவிட்டு, வாகனம் ஒட்டியவர்களிடம் ரூ.5 கோடி வசூல் செய்த சென்னை போலீஸ்!

டாஸ்மாக் கடையில், பாரில் மது அருந்திவிட்டு, வாகனம் ஓட்டிய 4,922 வழக்குகளில் ரூ.5 கோடி அபராதத் தொகை வசூலிக்கப்பட்டதாக சென்னைப் பெருநகர போக்குவரத்து காவல்துறை தகவல் தெரிவித்துள்ளது.

விபத்துக்களைக் குறைக்கும் வண்ணம் சென்னை பெருநகர காவல்துறை மோட்டர் வாகனச் சட்டத்தை திறம்பட அமலாக்கம் செய்து சாலை போக்குவரத்து விபத்துகளைக் குறைத்து வருகிறது.

சாலை விபத்துக்களில் உயிரிழப்புகள் ஏற்படுவதற்கு முக்கிய காரணங்களில் ஒன்று மது போதையில் வாகனம் ஓட்டுவதாகும். எனவே மது போதையில் வாகனம் ஓட்டுவதற்கு சட்டத்தில் கடுமையான தடுப்பு நடவடிக்கையாக தண்டனை வழங்கப்படுகிறது. 

அபராதத் தொகை ரூ.10,000 அதிகமாக இருப்பதால் பலர் அபராதத்தைச் செலுத்துவதில்லை. ஆனால் நீதிமன்றத்தில் உள்ள மெய்நிகர் பிரிவிலிருந்து அவர்களின் தொலைபேசி எண்களுக்கு அழைப்பு வந்தாலும் அபாரதம் செலுத்துவதில்லை. மேலும் 7,417 மது போதை வழக்குகள் தீர்க்கப்படாமல் நிலுவையில் உள்ளன.

இதுபோன்ற விதி மீறுபவர்களுக்கு நிலுவையில் உள்ள வழக்குகள் குறித்து சென்னை பெருநகரில் 10 இடங்களில் அமைந்துள்ள அழைப்பு மையங்கள் (Call centers) மூலம் தகவல் தெரிவித்து, கடந்த 26.02.2023 முதல் 04.03.2023 வரை அவர்களை நேரில் வரவழைத்து வழக்குகளை முடிப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

இதன் விளைவாக சென்னை பெருநகர போக்குவரத்து காவல் துறையின் அழைப்பு மையங்களின் அழைப்பை ஏற்று 594 பேர் ஆஜராகி அவர்களது நிலுவை வழக்குகளுக்கான அபராதத்தை ஆன்லைன் முறையில் செலுத்தினார்கள். 

கடந்த 5 வாரங்களில் அழைப்பு மையங்களின் இது போன்ற நடவடிக்கைகளால் 4,112 வழக்குகள் தீர்க்கப்பட்டு, ரூ.4 கோடியே 26 லட்சத்து 13 ஆயிரம் அபராதம் தொகை பெறப்பட்டது. 

இதனால் ஆறாவது வாரத்தில் அழைப்பு மையங்கள் மூலம் நிலுவையில் இருந்த 4,922 குடிபோதை வழக்குகள் தீர்க்கப்பட்டு, ரூ.5 கோடியே 9 லட்சத்து 16 ஆயிரம் அபராதத் தொகை வசூலிக்கப்பட்டது.

மேலும் குடித்துவிட்டு வாகனம் ஓட்டி அபராதம் செலுத்தாதவர்களின் சம்பந்தப்பட்ட வாகனம் மட்டுமின்றி, வேறு எந்த வாகனங்களாக இருந்தாலும், அசையும் சொத்துக்கள் உட்பட பறிமுதல் செய்ய நீதிமன்ற ஆணை பிறப்பிக்கப்படும் என எச்சரிக்கப்படுகிறது. 

ஏற்கெனவே இது போன்று குடி போதையில் வாகனம் ஓட்டி அபராதம் செலுத்தாதவர்களின் அசையும் சொத்துக்களை பறிமுதல் செய்வதற்கு இதுவரை 347 நீதிமன்ற ஆணை பிறப்பிக்கப்பட்டு அவை நடைமுறைப்படுத்த செயல்பாட்டில் உள்ளன என்று சென்னை பெருநகர காவல்துறை எச்சரித்து உள்ளது. 

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.