கோழிக்கோடு அருகே ஓடும் ரயிலில் இருந்து தள்ளி விட்டு வாலிபர் கொலை: சிவகங்கையை சேர்ந்தவர் கைது

திருவனந்தபுரம்: கர்நாடக  மாநிலம் மங்களூருவில் இருந்து 2 நாட்களுக்கு முன் இரவு திருவனந்தபுரத்திற்கு  மலபார் எக்ஸ்பிரஸ் ரயில் புறப்பட்டுச் சென்றது. இரவு சுமார் 10.30  மணியளவில் இந்த ரயில் கோழிக்கோடு அருகே கொயிலாண்டி என்ற இடத்தை தாண்டி  சென்று கொண்டிருந்தது. அப்போது ரயிலில் ஒரு பெட்டியில் பயணம் செய்து  கொண்டிருந்த 2 வாலிபர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டது. கண்ணிமைக்கும்  நேரத்தில் அவர்களில் ஒருவர் இன்னொருவரை ஓடும் ரயிலில் இருந்து கீழே தள்ளி  விட்டார். அதைப் பார்த்த சக பயணிகள் அதிர்ச்சியடைந்தனர். இது குறித்து  ரயில்வே போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.  

ரயில் கோழிக்கோடு ரயில்  நிலையம் வந்ததும், தள்ளிவிட்ட நபரை ரயில்வே போலீசார் கைது செய்து  விசாரித்தனர். விசாரணையில் அவர் சிவகங்கையை சேர்ந்த சோனமுத்து (48)  என்பது தெரியவந்தது. அவரிடம் கோழிக்கோடு ரயில்வே போலீசார் விசாரணை நடத்தி  வருகின்றனர். இதற்கிடையே ரயிலில் இருந்து கீழே விழுந்த அந்த வாலிபர் சம்பவ  இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். அவரது உடலை போலீசார் கைப்பற்றினர்.  அவர் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர் என்ற விவரம் தெரியவில்லை. 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.