சென்னை: தமிழக அரசின் 2023-24-ம் நிதியாண்டுக்கான நிதிநிலை அறிக்கைக்கு ஒப்புதல் அளிக்க தமிழக அமைச்சரவை கூட்டம் முதல்வர் தலைமையில் கூடி நடைபெற்று வருகிறது.
தமிழக அரசு கடந்த 2 ஆண்டுகளாக பொது நிதிநிலை அறிக்கையுடன், வேளாண் நிதிநிலை அறிக்கையையும் தனியாக தாக்கல் செய்து வருகிறது. அந்த வகையில், 2023-24-ம் நிதியாண்டுக்கான நிதிநிலை அறிக்கை மார்ச் மாதம் தாக்கல் செய்யப்பட உள்ளது. இதன்படி தமிழக சட்டப்பேரவையில் 2023-24-ம் ஆண்டுக்கான தமிழக அரசின் நிதிநிலை அறிக்கையை வரும் மார்ச் 20-ம் தேதி காலை 10 மணிக்கு, நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்கிறார்.
தொடர்ந்து, மார்ச் 28-ம் தேதி, 2023-24-ம் ஆண்டுக்கான முன்பண மானியக் கோரிக்கை மற்றும் 2022-23-ம் ஆண்டுக்கான இறுதி கூடுதல் மானியக் கோரிக்கை ஆகியவற்றையும் நிதியமைச்சர் தாக்கல் செய்கிறார். தமிழக நிதிநிலை அறிக்கையில், குடும்பத் தலைவிகளுக்கு ரூ.1,000 உரிமைத் தொகை வழங்கும் திட்டம் அறிவிக்கப்பட உள்ளது. இதுதவிர, பல்வேறு புதிய திட்டங்கள் அறிவிக்கப்பட உள்ளன. பழைய திட்டங்களுக்கு நிதி ஒதுக்கப்பட உள்ளது.
இதற்கு அனுமதி அளிக்க, தமிழக அமைச்சரவை கூட்டம் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று (பிப்.9) மாலை 5.30 மணிக்கு கூடி நடைபெற்று வருகிறது. இந்தக் கூட்டத்தில், நிதிநிலை அறிக்கை, புதிய திட்டங்கள் மற்றும் ஏற்கெனவே செயல்படுத்தப்படும் திட்டங்களின் விரிவாக்கம் உள்ளிட்டவற்றுக்கு அனுமதி அளிக்கப்பட உள்ளது.