கடலூரில் நாளை முழு அடைப்பு… NLC போராட்டத்திற்கு ஒத்துழைக்க பாமக அன்புமணி ராமதாஸ் கோரிக்கை!

கடலூர் மாவட்டம் வளையமாதேவி கீழ்பாதி கிராமத்தில் உழவர்களின் நிலத்தை கட்டுப்பாட்டில் எடுத்து சமன்படுத்துவதற்காக என்.எல்.சி (NLC) நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. இந்த சூழலில் அத்துமீறல்களும், அதற்கு ஆதரவாக மாவட்ட நிர்வாகமும், காவல்துறையும் அடக்குமுறைகளை கட்டவிழ்த்திருப்பதாக சொல்லப்படுகிறது. இதற்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

உழவர்களுக்கு இழப்பீடு

வளையமாதேவி கீழ்பாதி கிராமத்தில் நேற்று சமன்படுத்தப்பட்ட பெரும்பான்மையான நிலங்களுக்கு உரிய இழப்பீடு உழவர்களுக்கு வழங்கப்படவில்லை எனத் தெரிகிறது. அந்த நிலங்கள் 2006ஆம் ஆண்டில் கையகப்படுத்தப்பட்டவை. அவற்றுக்கு அப்போது அறிவிக்கப்பட்ட ரூ.6 லட்சம் மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. கூடுதலாக அறிவிக்கப்பட்ட ரூ.3 லட்சம் இன்னும் வழங்கப்படவில்லை.

அதிகார அத்துமீறல்

அந்த தொகையை வழங்காமலேயே நிலங்களைப் பறிப்பது அதிகார அத்துமீறல் எனக் குற்றம்சாட்டப்படுகிறது. ஏற்கனவே என்.எல்.சி நிறுவனத்திடம் உபரி நிலங்கள் இருக்கின்றன. எனவே தற்போது சமன்படுத்தப்பட்ட நிலங்களில் சுரங்கம் அமைக்க 15 ஆண்டுகள் வரை ஆகும். அப்போது கட்டுப்பாட்டில் எடுத்தால் கூடுதலாக விலை கொடுக்க வேண்டும் என்பதற்காகவே காவல்துறையை குவித்து நிலங்களை என்.எல்.சி நிறுவனமும், மாவட்ட நிர்வாகமும் பறித்துள்ளதாக கூறப்படுகிறது.

தமிழக அரசு விளக்கம்

பரவனாறு வெள்ளத்தடுப்பு பணிகளுக்காகவே நிலங்கள் எடுக்கப்பட்டு சமன்படுத்தப்பட்டன என்று தமிழக அரசு இன்னொரு காரணம் கூறுகிறது. இது அப்பட்டமான பொய் என்கின்றனர். ஏனெனில் பரவனாறு வெள்ளத்தடுப்புக் கால்வாய் அமைப்பதற்காக மிகக்குறைந்த நிலமே தேவைப்படும். ஆனால், அதற்கு தேவையான நிலங்களை விட பல மடங்கு நிலங்களை,

என்.எல்.சி நடவடிக்கை

தங்களின் கட்டுப்பாட்டில் எடுப்பதாகக் கூறி அவற்றில் கால்வாய் வெட்டியும், பள்ளம் தோண்டியும் என்.எல்.சி நிறுவனம் பாழ்படுத்தி இருப்பதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில் உழவர்களையும், பொதுமக்களையும் கிள்ளுக்கீரையாக கருதும் என்.எல்.சிக்கும், மாவட்ட நிர்வாகத்திற்கும் பாடம் புகட்டும் வகையில் கடலூர் மாவட்டம் முழுவதும் நாளை (மார்ச் 11) முழு அடைப்பு போராட்டத்திற்கு பாட்டாளி மக்கள் கட்சி அழைப்பு விடுத்துள்ளது.

அழைப்பு

இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், இது என்.எல்.சி நிலம் எடுப்பால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆதரவாக மட்டும் நடத்தப்படும் போராட்டம் அல்ல. அடுத்து வரும் ஆண்டுகளில் பொதுமக்களின் வீடுகள், நிலங்கள் பறிக்கப்பட்டு விடக்கூடாது என்ற நல்ல எண்ணத்தில் நடத்தப்படும் போராட்டம். நாளைய முழு அடைப்புப் போராட்டம் மிகப்பெரிய வெற்றி பெற வேண்டும்.

முழு அடைப்பு போராட்டம்

அப்பாவி உழவர்களின் விளை நிலங்களை அடக்குமுறையை ஏவி பறிக்கும் என்.எல்.சி மற்றும் கடலூர் மாவட்ட நிர்வாகத்தின் அத்துமீறலுக்கு முடிவு கட்ட வேண்டும். முழு அடைப்பு போராட்டத்திற்கு கடலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து உழவர் அமைப்புகள், வணிகர் அமைப்புகள், தொழிற்சங்கங்கள், தொண்டு நிறுவனங்கள்,

அத்தியாவசிய சேவைகள்

பொதுமக்கள், இளைஞர்கள், மாணவச் செல்வங்கள் உள்ளிட்ட அனைத்துத் தரப்பினரும் முழுமையான ஆதரவு அளிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. அதேசமயம் மருத்துவம், பால் உள்ளிட்ட இன்றியமையாத தேவைகள், 12ஆம் வகுப்பு சி.பி.எஸ்.இ பொதுத்தேர்வு எழுதச் செல்லும் மாணவர்களுக்கு எந்த இடையூறும் ஏற்படாமல் இருப்பதை போராட்டக்குழு உறுதி செய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.