என்எல்சிக்கு நிலம் எடுக்கும் முன் மக்கள் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும்: முதல்வரிடம் கூட்டணி கட்சிகள் வலியுறுத்தல்

சென்னை: நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்துக்கு நிலம் எடுக்கும் முன் அங்குள்ள விவசாயிகள், மக்களின் அனைத்து கோரிக்கைகளையும் நிறைவேற்ற வேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலினிடம், கம்யூனிஸ்ட், விசிக மற்றும் தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்துக்கு நிலம் எடுப்பதில் பொதுமக்களின் கோரிக்கைகள் தொடர்பாக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் இரா.முத்தரசன், விசிக தலைவர் திருமாவளவன், தவாக தலைவர் தி.வேல்முருகன் ஆகியோர் முதல்வர் ஸ்டாலினைநேற்று சந்தித்து பேசினர்.

பின்னர் செய்தியாளர்களிடம் அவர்கள் கூறியதாவது: கே.பாலகிருஷ்ணன்: நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்துக்கு நிலம் கொடுத்தவர்கள் வீட்டில் உள்ள இளைஞர்களுக்கு நிரந்தர வேலை, நிலம் இல்லாதவிவசாய தொழிலாளர்கள், சிறு வியாபாரிகளுக்கு நஷ்ட ஈடு, கடந்த ஆண்டுகளில் நிலம் கொடுத்தவர்களுக்கு நிவாரணம் போன்றவை நிலுவை உள்ளன.விவசாயிகளை உடனடியாக வெளியேற்றக் கூடாது. கோரிக்கைகளை நிறைவேற்றிய பின் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியுள்ளோம்.

திருமாவளவன்: ஒரே இடத்தில்நிலப்பட்டாவை வைத்துள்ளவர் களின் நிலத்துக்கான இழப்பீட்டில் வேறுபாடு இருக்கிறது. இதைக் களைய வேண்டும் என்று கூறியுள்ளோம்.

இரா.முத்தரசன்: நிலமற்ற கூலிவிவசாய தொழிலாளர்களுக்கு எந்த இழப்பீடும் வழங்கப்படவில்லை. அவர்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்கவும் முதல்வரிடம் கோரிக்கை விடுத்துள்ளோம். இந்த நிறுவனம் இங்கு இருக்கவேகூடாது என்று சிலர் செய்யும் பிரச்சாரத்தை நாங்கள் ஏற்கவில்லை.

தி.வேல்முருகன்: வீட்டில் ஒருவருக்கு நிரந்தர வேலையை உறுதிசெய்ய வேண்டும் என்றுதெரிவித்தோம். அடுத்தகட்ட பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு செய்வதாக முதல்வர் உறுதியளித்துள்ளார். இவ்வாறு அவர்கள் தெரிவித் தனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.