சட்டம் ஒழுங்கை கெடுக்க சில அரசியல் சக்திகள் தகவல் தொழில்நுட்பத்தை பயன்படுத்துகின்றன: மு.க.ஸ்டாலின்

சென்னை: வதந்தி பரப்பி, சட்டம் ஒழுங்கை கெடுக்க சில அரசியல் சக்திகள் தகவல் தொழில்நுட்பத்தை பயன்படுத்துவதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை சார்பில் சென்னை, நந்தம்பாக்கம், வர்த்தக மையத்தில் இன்று (பிப்.14) நடைபெற்ற ஐம்பதாவது பிரிட்ஜ் கருத்தரங்கினை (BRIDGE’23) முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

இதனைத் தொடர்ந்து முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசுகையில், “கையடக்க தொலைபேசியில் அனைத்து புத்தகங்களும் கிடைக்கின்றன. எல்லா துறைகளிலும் தொழில்நுட்பம் புரட்சியை ஏற்படுத்தி வருகிறது. தமிழகத்தில் தகவல் தொழில் நுட்ப புரட்சிக்கு வித்திட்டவர் கருணாநிதி. தொழில் நுட்ப வளர்ச்சியால் கல்வி அறிவு விரல் நுனியில் வந்துவிட்டது.

ஐ.டி பணியாளர்கள் தமிழகத்தில் அதிகளவில் வளர காரணம் திமுக அரசு தான். ஐடி துறையில் தமிழகம் முதல் இடத்தை பிடிக்க திராவிட மாடல் ஆட்சி நடவடிக்கை எடுத்து வருகிறது. தகவல் தொழில்நுட்பம் சார்ந்த திட்டங்களில் தமிழகம் முன்னோடி மாநிலமாக திகழ்கிறது. தகவல் தொழில்நுட்பதை மேம்படுத்த ஆலோசனை குழு அமைக்கப்பட்டுள்ளது. தரவுகள் தான் இந்த காலத்தின் முக்கிய எரிபொருள்.

வதந்தி பரப்பி, சட்டம் ஒழுங்கை கெடுக்க சில அரசியல் சக்திகள் தகவல் தொழில்நுட்பத்தை பயன்படுத்துகின்றனர். இளைய தலைமுறை தகவல் தொழில்நுட்பத்தை தங்களின் வளர்ச்சிக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும். ஆன்லைன் ரம்மி விளையாட்டு மனித உயிர்களை பலிவாங்குகிறது. எனவே இளைய தலைமுறையினர் தகவல் தொழில்நுட்பத்தை சரியாக பயன்படுத்தி வாழ்வில் முன்னேற்றம் அடைய வேண்டும்” என தெரிவித்தார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.