பெண்கள் பிரிமீயர் லீக்: பந்துவீச்சில் மிரட்டிய உ.பி.; மும்பை 127 ரன்கள் சேர்ப்பு…!

மும்பை,

முதலாவது பெண்கள் பிரிமீயர் ‘லீக்’ 20 ஓவர் கிரிக்கெட் போட்டி மும்பையில் உள்ள 2 மைதானங்களில் நடைபெற்று வருகிறது. இதில் மும்பை இந்தியன்ஸ், உ.பி.வாரியர்ஸ், டெல்லி கேப்பிடல்ஸ், குஜராத் ஜெயண்ட்ஸ், பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் உள்ளிட்ட 5 அணிகள் ஆடி வருகின்றன.

ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா 2 முறை மோத வேண்டும். லீக் சுற்றின் முடிவில் புள்ளிப்பட்டியலில் முதல் இடத்தை பிடிக்கும் அணி நேரடியாக இறுதிப்போட்டிக்கு முன்னேறும். 2வது மற்றும் 3வது இடங்களை பிடிக்கும் அணிகள் எலிமினேட்டர் போட்டியில் மோதும். அதில் வெற்றி பெறும் அணி 2வது அணியாக இறுதிப்போட்டிக்கு முன்னேறும்.

இன்று 2 ஆட்டங்கள் நடைபெறுகின்றன. இன்று நடைபெறும் முதலாவது போட்டியில் மும்பை இந்தியன்ஸ், உ.பி.வாரியர்ஸ் அணிகள் மோத உள்ளன. இந்த போட்டிக்கான டாஸ் சுண்டப்பட்டது. இதில் டாஸ் வென்ற உ.பி.வாரியர்ஸ் முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. இதையடுத்து மும்பை அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக மேத்யூஸ் மற்றும் யாஷ்டிகா களம் இறங்கினர். இதில் யாஷ்டிகா 7 ரன்னிலும், அடுத்து வந்த ஸ்கிவர் ப்ரூண்ட் 5 ரன்னிலும் அவுட் ஆகினர்.

இதையடுத்து மேத்யூஸ் உடன் கேப்டன் ஹர்மன்பிரீத் இணைந்தார். நிதானமாக ஆடிய இந்த இணை அணியை சரிவில் இருந்து மீட்டது. இதில் மேத்யூஸ் 35 ரன்னிலும், ஹர்மன்பிரீத் 25 ரன்னிலும் வீழ்ந்தனர். இதையடுத்து களம் புகுந்த அமெலியா கெர் 3 ரன், அமென்ஜோட் கவுர் 5 ரன், ஹியூமாரியா காஸி 4 ரன்னிலும் அடுத்தடுத்து அவுட் ஆகினர்.

இறுதியில் அந்த அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 10 விக்கெட் இழப்புக்கு 127 ரன்களே எடுத்தது. அந்த அணி தரப்பில் மேத்யூஸ் 35 ரன்னும், வாங் 32 ரன்னும், ஹர்மன்பிரீத் கவுர் 25 ரன்னும் எடுத்தனர். உ.பி.வாரியர்ஸ் தரப்பில் சோபி 3 விக்கெட்டும், ராஜேஸ்வரி, தீப்தி ஷர்மா தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர். இதையடுத்து 128 ரன்கள் எடுத்தாக் வெற்றி என்ற இலக்குடன் உ.பி. அணி ஆட உள்ளது.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.