இன்று பட்ஜெட் தாக்கல்… என்னென்ன எதிர்பார்க்கலாம்!!

2023-24ஆம் நிதியாண்டுக்கான நிதிநிலை அறிக்கையை நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் இன்று காலை 10 மணிக்கு சட்டப்பேரவையில் தாக்கல் செய்ய உள்ளார்.

பேரவையின் இந்த ஆண்டுக்கான முதல் கூட்டம் கடந்த ஜனவரி 9ஆம் தேதி ஆளுநர் ஆர்.என்.ரவி உரையுடன் தொடங்கியது. தொடர்ந்து, சில நாட்கள் பேரவை நடைபெற்றது. இந்நிலையில், தமிழக அரசின் 2023-24ஆம் நிதி ஆண்டுக்கான பொது பட்ஜெட் பேரவையில் இன்று தாக்கல் செய்யப்படுகிறது.

பட்ஜெட்டை மின்னணு வடிவில் நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்கிறார். இடைத்தேர்தலின்போது, குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1,000 உரிமைத் தொகை வழங்கும் திட்டம் குறித்த அறிவிப்பு பட்ஜெட்டில் இடம்பெறும் என்று முதலமைச்சர் கூறியிருந்தார்.

எனவே அதுகுறித்து அறிவிப்பு பட்ஜெட்டில் இடம்பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதனால் மக்கள் மிகவும் எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர். காலை சிற்றுண்டி வழங்கும் திட்டத்தை விரிவுபடுத்துவது உட்பட பல்வேறு அறிவிப்புகள் வெளியாக வாய்ப்புள்ளது. பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் கூட்டமைப்பு போராட்டங்களை அறிவித்துள்ளது.

எனவே அவர்களை சமாதானப்படுத்த, முக்கிய அறிவிப்புகளை அரசு வெளியிடும் என்ற எதிர்பார்ப்பு, அவர்களிடம் ஏற்பட்டுள்ளது. இதுதவிர, பல புதிய திட்டங்கள் குறித்த அறிவிப்புகளும் வெளியாக உள்ளன.

பட்ஜெட் தாக்கலை தொடர்ந்து பேரவைத் தலைவர் அப்பாவு தலைமையில் அலுவல் ஆய்வுக்குழு கூட்டம் நடைபெறும். இதில், ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி உள்ளிட்ட கட்சிகளின் பிரதிநிதிகள் பங்கேற்பார்கள்.

பட்ஜெட் மீதான விவாதத்துக்காக பேரவைக் கூட்டத்தை எத்தனை நாட்கள் நடத்துவது என்று இக்கூட்டத்தில் முடிவு செய்து, அறிவிக்கப்படும். திமுக ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு, கடந்த 2021ஆம் ஆண்டு முதல் வேளாண் துறைக்காக தனி பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு வருகிறது.

அதன்படி, வேளாண் பட்ஜெட்டை துறை அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம் 21ஆம் தேதி தாக்கல் செய்ய உள்ளார். பல்வேறு கோரிக்கைகளுடன் அதனை எதிர்பார்த்து விவசாயிகள் காத்திருக்கின்றனர்.

newstm.in

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.