அ.தி.மு.க. சட்ட திட்ட விதி 20 (அ) பிரிவு 2-ல் குறிப்பிடப்பட்டுள்ளவாறு அ.தி.மு.க. பொதுச் செயலாளர் கட்சியின் அடிப்படை உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்படுவார் என்ற விதிமுறைக்கு ஏற்ப, அ.தி.மு.க. பொதுச் செயலாளர் பொறுப்புக்கான தேர்தல் 26-3-2023 காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை நடக்க உள்ளது.
இந்நிலையில், அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் நிறைவு பெற்றுள்ளது. நேற்று காலை தொடங்கிய வேட்புமனு தாக்கல் இன்று பிற்பகல் 3 மணிவுடன் நிறைவு பெற்றுள்ளது.
நேற்று காலை சுமார் 11 மணியளவில் முதல் ஆளாக அக்கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி வேட்புமனுவை தாக்கல் செய்தார். நேற்று மட்டும் மொத்தம் 38 பேர் மனுதாக்கல் செய்தனர். அதில் 37 பேர் இபிஎஸ்-க்கு ஆதரவாக மனுதாக்கல் செய்துள்ளனர்.
இரண்டாவது நாளான இன்றும் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாகவே மாவட்ட செயலாளர்கள் வரிசை கட்டி வேட்புமனுவை தாக்கல் செய்தனர். மொத்தமாக 219 பேர் எடப்பாடி பழனிசாமியை பொதுச்செயலாளர் பதவிக்கு போட்டியிட ஆதரவளித்து வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். எடப்பாடி பழனிசாமியை எதிர்த்து போட்டியிட யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லை.
இதற்கிடையே இன்று காலை பொதுச்செயலாளர் தேர்தலை எதிர்த்த வழக்கில், வரும் 24 ஆம் தேதிவரை தேர்தல் முடிவுகளை வெளியிட கூடாது என்று நீதிமன்றம் தடை விதித்திருப்பது குறிப்பிடத்தக்கது.