“ஒளியை பிடிச்சுக்கிட்டேன்..”- வராக நதிக்கரை ஓரம் பாடல் வரியை மாற்றி ரசிகர்களை ஈர்த்த ARR!

ட்விட்டர், ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் என எந்த சமூக வலைதள பக்கங்களை திறந்தாலும், பத்தில் ஆறு சென்னையில் நடந்த இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானின் சூஃபி கச்சேரி குறித்த பதிவுகளாகவே இருக்கின்றன.

சினிமாத்துறையில் பணியாற்றும் லைட் மேன்களின் நிதி ஆதாரத்துக்காக கடந்த மார்ச் 19ம் தேதி நடத்தப்பட்ட நிகழ்ச்சிதான் இந்த சூஃபி கச்சேரி. இதில் ஆயிரக்கணக்கான ரசிகர்கள் பங்கேற்று ஏ.ஆர்.ரஹ்மானின் இசையில் உருவான இனிமையான சூஃபி பாடல்களை கேட்டு மெய்மறந்து போயினர். இது குறித்த ஏராளமான பதிவுகளும் தொடர்ந்து பகிரப்பட்டுக் கொண்டே இருக்கின்றன.

அதில் ஒன்றுதான் சங்கமம் படத்தில் இடம்பெற்ற வராக நதிக்கரை ஓரம் பாடலின் மற்றொரு பரிமாணம் குறித்த பதிவு. படத்தில் சங்கர் மகாதேவன் பாடியிருந்தாலும் அதனைக் காட்டிலும் நடந்து முடிந்த சூஃபி கச்சேரியில் ஏ.ஆர்.ரஹ்மான் தன் குரலில் பாடி ரசிகர்களை சிலிர்த்துப் போகச் செய்திருக்கிறார்.

அதுவும் சில பாடல் வரிகளை அவர் மாற்றியமைத்து பாடியது கூடுதல் சிறப்பை அந்த பாடலுக்கு கொடுத்திருக்கிறது என்றெல்லாம் ரசிகர்கள் பதிவிட்டு வருகிறார்கள். குறிப்பாக, ஒரிஜினல் பாடலின் இரண்டாவது சரணத்தில் “நீ என்னக் கடந்து போகயிலே உன் நிழல பிடிச்சுகிட்டேன்” என வரும் வரிக்கு பதிலாக, “நான் எனை கடந்து போய்விடவே உன் ஒளிய பிடிச்சுக்கிட்டேன்” என்றும் “ஒத்த விழிப்பார்வை ஊடுருவப் பார்த்து காதல் கிடைச்சிடுச்சு” என்றும் ஏ.ஆர்.ரஹ்மான் தன்னுடைய வசீகரக் குரலால் பாடி ரசிகர்களை ஈர்த்திருக்கிறார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.