புதுடெல்லி: டெல்லி மதுபான கொள்கை முறைகேடு தொடர்பாக விசாரணைக்கு ஆஜரான கவிதா தனது செல்போன்களை அமலாக்கத்துறையிடம் ஒப்படைத்ததாக தெரிவித்துள்ளார். தெலங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவின் மகளும், எம்எல்சியுமான கவிதாவிடம், டெல்லி மதுபான கொள்கை முறைகேடு தொடர்பாக அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். ஏற்கனவே கடந்த 11ம் தேதி 9 மணி நேரமும் நேற்று முன்தினம் 10 மணி நேரம் அமலாக்கத்துறை அதிகாரிகள் கவிதாவிடம் விசாரணை நடத்தினார்கள்.
இந்நிலையில் மூன்றாவது முறையாக கவிதா நேற்றும் விசாரணைக்கு டெல்லி அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜரானார். காலை 11.30மணிக்கு வந்த கவிதாவிடம் அமலாக்கத்துறை விசாரணை நடத்தி அவரது வாக்குமூலத்தை பதிவு செய்தது. விசாரணைக்கு ஆஜராவதற்கு முன்பாக கவிதா தான் பயன்படுத்திய செல்போன்களை அமலாக்கத்துறையிடம் ஒப்படைப்பதாக தெரிவித்தார். கடந்த ஆண்டு இந்த வழக்கில் தாக்கல் செய்யப்பட்ட முதல் குற்றப்பத்திரிக்கையில் 10 முறை ஐஎம் இஐ மாற்றிய இரண்டு செல்போன் எண்களை பயன்படுத்தியதாக ஏஜென்சி கூறியது.
எனக்கு சம்மன் அனுப்பப்படாமல், அல்லது எந்த கேள்வியும் கேட்கப்படாமல் இருந்தபோது எப்படி, ஏன், எந்த சூழ்நிலையில் இந்த குற்றச்சாட்டை ஏஜென்சி குறிப்பிடுகிறது என்பது திகைப்பூட்டுவதாக உள்ளது” என்றார். இது தொடர்பாக அமலாக்கத்துறைக்கு கவிதா எழுதிய கடிதத்தில், ‘‘இந்த போன்கள் எனது உரிமை. ஒரு பெண்ணின் தனியுரிமையில் ஊடுருவ முடியுமா?” என கேள்வி எழுப்பியுள்ளார்.