போலி சாதி சான்றிதழ்களால் எம்.பி., எம்.எல்.ஏ.வான நபர்களின் உறுப்பினர் அந்தஸ்து ரத்து செய்யப்பட வேண்டும்: வி.எச்.பி. வலியுறுத்தல்

புதுடெல்லி,

கேரளாவில் 2021-ம் ஆண்டில், இடுக்கி மாவட்டத்திற்கு உட்பட்ட தேவிகுளம் சட்டசபை தொகுதிக்கான தேர்தலில் சி.பி.எம். சார்பில் போட்டியிட்டு ஏ. ராஜா என்பவர் 7 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

இந்த தொகுதியானது எஸ்.சி. சமூகத்திற்காக ஒதுக்கப்பட்டது. ஆனால், கிறிஸ்தவ சமூக நபரான ராஜா இந்த தொகுதியில் போட்டியிட தகுதி வாய்ந்தவர் அல்ல என கோரி காங்கிரசை சேர்ந்த டி. குமார் என்பவர் கேரள ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்து உள்ளார். தேர்தலில் குமார், 2-வது இடம் பிடித்து உள்ளார்.

இதனை விசாரித்த ஐகோர்ட்டு தேர்தல் முடிவை ரத்து செய்து உத்தரவிட்டு உள்ளது. இந்நிலையில், விஷ்வ இந்து பரிஷத் அமைப்பின் செய்தி தொடர்பாளர்களில் ஒருவரான வினோத் பன்சால் பாரத் ஸ்வாகத் உத்சவ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு நேற்று பேசினார்.

அவர் இதனை குறிப்பிட்டு பேசும்போது, போலி சாதி சான்றிதழை பயன்படுத்தி கேரளாவில் ஏ. ராஜா எம்.எல்.ஏ.வுக்கான தேர்தலில் போட்டியிட்டு உள்ளார்.

அவரது உறுப்பினர் அந்தஸ்து ரத்து செய்யப்பட்டு உள்ளது. நீங்கள் தரவுகளை அலசி ஆராய்ந்து பார்த்தீர்களானால், நாட்டில் இதுபோன்ற எண்ணற்ற எம்.எல்.ஏ.க்களை கண்டறிய முடியும்.

நாடாளுமன்றத்திலும் உறுப்பினர்களாக அமர்ந்து கொண்டிருப்பவர்களை கண்டறிய முடியும். எஸ்.சி. சமூகத்தின் பெருமையை அவர்கள் புண்படுத்தி வருகின்றனர். நாடாளுமன்ற உறுப்பினர்களான, நமது எஸ்.சி. சகோதரர்களுக்கு எதிரான இந்த முறையற்ற விசயங்களை இந்து சமூகம் சகித்து கொள்ளாது.

போலி சாதி சான்றிதழ்களை சமர்ப்பித்து, தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்ற அனைத்து மோசடியான எம்.பி. மற்றும்எம்.எல்.ஏ.க்களின் உறுப்பினர் அந்தஸ்து ரத்து செய்யப்பட வேண்டும் என அவர் வலியுறுத்தி உள்ளார்.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.