“2018-21 வரையில் தலித்துகள்மீதான தாக்குதல் தொடர்பாக 1,89,945 வழக்குகள் பதிவு!" – மத்திய அரசு தகவல்

இந்தியாவில் பட்டியலினத்தவர், பழங்குடியினர்மீதான தாக்குதல்கள் என்பவை நாள்தோறும் ஆங்காங்கே நடந்துகொண்டுதான் இருக்கின்றன. வழக்குகளும் பதிவுசெய்யப்பட்டு கொண்டுதான் இருக்கின்றன. ஆனால், வழக்குகள் பதிவுசெய்யப்படுமளவுக்கு, அவற்றில் எத்தனை குற்றவாளிகள் தண்டிக்கப்படுகின்றனர் என்பது வெளியில் தெரிவதில்லை.

தாக்குதல்

இந்த நிலையில், 2018 முதல் 2021 வரையில், பட்டியலினத்தவர், பழங்குடியினர்மீதான தாக்குதல் தொடர்பாக 1,89,945 வழக்குகள் பதிவுசெய்யப்பட்டிருப்பதாக நாடாளுமன்றத்தில் மத்திய அரசு தகவல் தெரிவித்திருக்கிறது.

முன்னதாக, பகுஜன் சமாஜ் கட்சியைச் சேர்ந்த எம்.பி கிரிஷ் சந்திரா, கடந்த நான்கு ஆண்டுகளில் பட்டியலினத்தவர், பழங்குடியினர்மீதான தாக்குதல் சம்பவங்களின் எண்ணிக்கை குறித்து நாடாளுமன்றத்தில் நேற்று கேள்வியெழுப்பினார்.

நாடாளுமன்றம்

பின்னர் இந்த கேள்விக்கு, தேசிய குற்ற ஆவணக் காப்பக அறிக்கையை மேற்கோள் காட்டி பதிலளித்த மத்திய உள்துறை இணையமைச்சர் அஜய் மிஸ்ரா, “குற்றங்கள் குறித்த புள்ளிவிவரத் தரவுகளைத் தொகுக்கும் தேசிய குற்ற ஆவணக் காப்பகத்தின் அறிக்கை 2021-ல் வெளியிடப்பட்டது. அதிலுள்ள தரவுகளின்படி, நான்கு ஆண்டுகளில், பட்டியலினத்தவர், பழங்குடியினருக்கு எதிரான குற்றங்களுக்காக 27,754 பேர் தண்டனை பெற்றிருக்கின்றனர்.

தலித்துகள்மீதான தாக்குதல்

இதில், உத்தரப்பிரதேசத்தில் அதிக அளவில் வழக்குகள் பதிவுசெய்யப்பட்டிருக்கின்றன. எண்ணிக்கையின்படி உத்தரப்பிரதேசத்தில், 2018-ல் 11,924, 2019-ல் 11,829, 2020-ல் 12,714, 2021-ல் 13,146 வழக்குகள் பதிவுசெய்யப்பட்டிருக்கின்றன. மேலும், மணிப்பூர், மேகாலயா, மிசோரம், நாகாலாந்து, லட்சத்தீவு, அந்தமான், நிக்கோபார் தீவுகளில் கடந்த நான்கு ஆண்டுகளில் பட்டியலினத்தவர், பழங்குடியினருக்கு எதிரான வன்கொடுமை வழக்குகள் எதுவும் பதிவாகவில்லை” என்று தெரிவித்தார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.