இப்படி கேட்டால் நடிப்பதையே நிறுத்தி விடுவேன் : டென்ஷனான ஜூனியர் என்டிஆர்

கடந்த வருடம் ராஜமவுலி இயக்கத்தில் வெளியான ஆர்ஆர்ஆர் படத்தில் ராம்சரணுடன் இணைந்து நடித்திருந்தார் ஜூனியர் என்டிஆர். அந்த படம் வெளியாவதற்கு முன்பே ராம்சரண் அடுத்ததாக ஷங்கர் இயக்கத்தில் ஒரு படத்திலும் தனது தந்தை சிரஞ்சீவி நடித்த ஆச்சார்யா படத்திலும் ஒப்புக்கொண்டு நடிக்க துவங்கி விட்டார். அதேசமயம் ஜூனியர் என்டிஆர் அடுத்ததாக கொரட்டாலா சிவா இயக்கத்தில் நடிக்க இருக்கிறார் என அறிவிக்கப்பட்டாலும் இன்னும் படப்பிடிப்பு துவங்கப்பட்டதாக அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் வெளியாகவில்லை.

அது மட்டுமல்ல ஆர்ஆர்ஆர் படம் வெளியான பின்பும் கூட அதன் பிரமோஷன் நிகழ்ச்சிகள், அடுத்தடுத்து கோல்டன் குளோப் விருது மற்றும் ஆஸ்கர் விருது தொடர்பான பிரமோஷன் நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டு வந்தார் ஜூனியர் என்டிஆர். சமீபத்தில் அவரது ஒன்றுவிட்ட சகோதரர் நந்தமூரி தாரக ரத்னாவின் மறைவும் அவரை சற்று பாதித்தது. இந்த நிலையில் அதிலிருந்து மீண்டு சமீபத்தில் நடைபெற்ற, தற்போது ரிலீசாகியுள்ள தாஸ் கா தம்கி என்கிற படத்தின் புரமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார் ஜூனியர் என்டிஆர்.

அப்போது அவரிடம் விழாவில் கலந்து கொண்ட ரசிகர்கள் அடுத்த படம் என்ன, எப்போது என்பது குறித்து தொடர்ந்து கேள்விகளை கேட்டு கூச்சலிட்டு கொண்டிருந்தனர். இதனால் ஒரு கட்டத்தில் டென்ஷனான ஜூனியர் என்டிஆர் இதேபோன்று நீங்கள் கேட்டுக் கொண்டிருந்தால் நான் படங்களில் நடிப்பதையே நிறுத்தி விடுவேன் என்று கூற, இதை கேட்டு அங்கிருந்த அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர். ஆனால் அடுத்த சில வினாடிகளிலேயே, அப்படி படங்களில் நடிப்பதை நிறுத்தும் எண்ணம் எதுவும் தற்போதைக்கு இல்லை” என்று கூறி மீண்டும் நிலைமையை சகஜமாக்கினார் ஜூனியர் என்டிஆர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.