நீதிமன்ற வளாகத்துக்குள் மனைவி மீது ஆசிட் வீசிய கணவன்… கோவையில் அதிர்ச்சி சம்பவம்

கோவை மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் சூலூர் கண்ணம்பாளையம் பகுதியை சேர்ந்த பெண்ணொருவர் மீது அவரது கணவர் சிவா என்பவர் ஆசிட் வீசி தப்பி ஓட இன்று முயற்சி செய்தார். இச்சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அவரை விரட்டிப் பிடித்துள்ளார், அங்கிருந்த பெண் காவலரொருவர். அவருக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டு வெகுமதி வழங்கப்பட்டிருக்கிறது. 
கோவை ராமநாதபுரம் காவேரி நகர் பகுதியைச் சேர்ந்த சிவா என்பவரது மனைவி கவிதா (33). கவிதா, கடந்த 2016 இல் பஸ்ஸில் பயணிக்கும் பயணியிடம் 10 பவுன் தங்க நகை பறித்த வழக்கில் கைது செய்யப்பட்டு ஜாமீனில் வெளிவந்தவராவார். அந்த வழக்கு தொடர்பாக நீதிமன்றத்திற்கு வாய்தாவிற்கு இன்று சென்றிருந்தார் அவர். இதனிடையே கவிதாவிற்கும் சிவாவிற்கும் இடையே அடிக்கடி தகராறுகள் ஏற்பட்டு வந்ததாக தெரிகிறது (கவிதா தனது கணவரை பிரிந்து இரு குழந்தைகளுடன் வாழ்ந்து வந்ததாக சொல்லப்படுகிறது).
இவ்வாறான சூழலில்தான் இன்று நகைபறிப்பு வழக்கில் ஆஜராக கவிதா நீதிமன்றம் சென்றிருந்தார். அவரைப் பின் தொடர்ந்து அங்கு சென்ற சிவா, வழக்கு தொடர்பாக காத்திருந்த கவிதாவிடம் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். வாக்குவாதம் முற்றிய நிலையில் சிவா பிளாஸ்டிக் பாட்டிலில் மறைத்து வைத்திருந்த ஆசிட்டை கவிதாவின் உடல்மேல் பரவலாக ஊற்றியுள்ளார். இதில் கவிதா பலத்த (40%) காயமடைந்துள்ளார். இதனைக் கண்டு அக்கம் பக்கத்தில் இருந்த வழக்கறிஞர்கள் சிலர் கவிதாவை காப்பாற்ற முற்பட்டுள்ளனர். அப்போது வழக்கறிஞர்கள் சிலர் மீதும் ஆசிட் பட்டதில் அவர்களுக்கும் சிறு சிறு காயங்கள் ஏற்பட்டுள்ளன.
image
இந்த நிலையில் ஆசிட் வீசிய சிவாவை அங்கிருந்த வழக்கறிஞர்கள் விரட்டத்தொடங்கினர். அங்கிருந்த பெண் காவலர் இந்துமதி, விரைந்து சென்று அவரை விரட்டி பிடித்தார். இதற்கிடையே காயமடைந்த கவிதா வழக்கறிஞர்கள் உதவியால், உடனடியாக மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இந்த சம்பவத்தால் நீதிமன்ற வளாகம் முழுவதும் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. கடந்த மாதம் இதே நீதிமன்ற வளாகம் அருகே ரவுடிகளுக்கிடையான மோதலில் ஒருவர் வெட்டி படுகொலை செய்யப்பட்ட நிலையில், மீண்டும் ஒரு குற்ற சம்பவம் நீதிமன்றத்திற்கு உள்ளேயே நடந்தது கோவை மக்களிடையே பெரும் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.
image
இதனிடையே சம்பவ இடத்தை நேரில் ஆய்வு செய்த கோவை வடக்கு துணை ஆணையர், “முதற்கட்ட விசாரணையில் கணவன் மனைவி இடையேயான பிரச்னையில்தான் கவிதா மீது சிவா ஆசிட் ஊற்றியது தெரியவந்துள்ளது. தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பிளாஸ்டிக் தண்ணீர் பாட்டிலில் மறைத்து ஆசிடை சிவா எடுத்து வந்ததால் நீதிமன்றத்தில் இருந்தவர்களுக்கு சந்தேகம் ஏற்படவில்லை. தொடர்ந்து புலன் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. விரைவில் முழுவிவரம் தெரிவிக்கப்படும்” என கூறினார். சம்பவம் தொடர்பாக பந்தய சாலை காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணையை தொடங்கியுள்ளனர்.
image
இதில் குற்றவாளியை மடக்கிப்பிடித்த ஆனைமலை காவல் நிலைய பெண் தலைமை காவலர் இந்துமதிக்கு, மாவட்ட காவல் அலுவலகத்தில் கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரிநாராயணன் வெகுவாக பாராட்டு தெரிவித்தார். மேலும் 5,000 ரூபாய் பண வெகுமதியும் வழங்கினார்.
imageSource : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.