Online Rummy Ban Bill: காகிதத்தால் அல்ல… இதயத்தால் உருவாக்கப்பட்ட சட்டம்… மசோதா மீண்டும் நிறைவேற்றம்!

தமிழ்நாடு சட்டப்பேரவையில், ஆன்லைன் சூதாட்டம் தடை மசோதா இன்று மீண்டும் தாக்கல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக, ஆன்லைன் சூதாட்டம் தொடர்பாக பேரவையில் ஆளுநர் அனுப்பிய கடிதத்தை சபாநாயகர் அப்பாவு ஆங்கிலத்திலும், தமிழிலும் வாசித்துக்காட்டினார்.

கனத்த இதயத்துடன்!

இதைத்தொடர்ந்து, ஆன்லைன் சூதாட்ட தடை மசோதாவை முதலமைச்சர் ஸ்டாலின் அவையில் தாக்கல் செய்து பேசியதாவது,”மிகுந்த கனந்த இதயத்துடன் நின்றுகொண்டு உள்ளேன். இதுவரை 46 பேர் உயிரிழந்துள்ளனர். சென்னையை சேர்ந்த வினோத் ரூ.17 லட்சத்தை இழந்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். இது அரசிற்கு பொறுப்பு உள்ளது.

ஆன்லைன் சூதாட்டத்தை தடுக்க சந்துரு தலைமையில் குழு அமைத்தோம். அறிக்கை என்னிடம் சமர்ப்பிக்கப்பட்டது. இது அமைச்சரவையிலும் விவாதிக்கப்பட்டது. மாணவர்களின் நுண்ணறிவு எழுதும் திறன் 74 சதவீதம் குறைந்து உள்ளதாக ஆசிரியர்கள் தெரிவித்துள்ளனர். 

ஆன்லைன் சூதாட்டம் தொடர்பாக பொதுமக்கள், பெற்றோர்கள், சமூக ஆர்வலர்கள் என அனைத்து தரப்பினரும் கருத்து தெரிவித்துள்ளனர். ஓய்வுபெற்ற நீதியரசர் சந்துரு அளித்த அறிக்கை அடிப்படையிலும், பொதுமக்களின் கருத்து அடிப்படையிலும் அமைச்சரவையில் ஒப்புதல் பெறப்பட்டு அவசர சட்டம் இயற்றப்பட்டு ஆளுநருக்கு அனுப்பப்பட்டது. மீண்டும் ஒப்புதலுக்கு பேரவையில் வைக்கப்பட்டு உள்ளது, ஆளுநருக்கு மீண்டும் அனுப்பிவைக்கப்பட உள்ளது. உறுப்பினர்கள் ஒருமித்த ஆதரவு தர வேண்டும்.

மாநிலத்திற்கு உரிமை உண்டு… உண்டு…!

இந்த சட்டத்தை இயற்ற மாநிலங்களுக்கு உரிமை உண்டு ஏன அழுத்தி சொல்கிறேன். இனி ஒரு உயிர் பறிக்கப்படாமல் , இனி ஆன்லைன் விளையாட்டு நடைபெறாமல் இருக்க இணையவழி சூதாட்டம் மற்றும் விளையாட்டு மறு ஆய்விற்கு எடுத்து கொள்ள கேட்டு கொள்கிறேன். அரசியல் காரணங்களில் கொள்கைகளில் நமக்கு மாறுபட்ட கருத்துக்கள் இருக்கலாம், அப்படி எழுவது இயற்கையானது தான்.

ஆனால், மனித உயிர்களைப் பழிவாங்கும் ஆன்லைன் சூதாட்டத்தை ஒழிப்பது இதயம் உள்ளவர்கள் யாருக்கும் மாறுபட்ட கருத்து இருக்க முடியாது, இருக்கவும் கூடாது. எனது மரணம் கடைசியாக இருக்கட்டும் என்று சோகக்குரல் என் குடும்பத்திற்கு ஏற்பட்ட பாதிப்பு இன்னொரு குடும்பத்திற்கு ஏற்படக்கூடாது. இந்த அழுகுரல் இனி ஒரு முறை எந்த மாநிலத்திலும் எழக்கூடாது. ஆன்லைன் ரம்மிக்கு எதிராக பொதுமக்களிடம் இருந்து 10,735 மின்னஞ்சல் பெறப்பட்டன. அதற்கு ஆதரவாக 25 மின்னஞ்சல் மட்டும் வந்தன. 

சட்டம் ஒழுங்கு பேணுவதும், மக்களை பாதுகாப்பதும் குற்ற சம்பவங்கள் நிகழாமல் தடுப்பதும் குற்றவாளிடம் இருந்து மக்களை காப்பதும் மாநில அரசாங்கத்தினுடைய மிக முக்கியமான கடமையாகும். மக்கள் அனைவரையும் ஒழுங்குபடுத்தவும் நெறிப்படுத்தவும், காக்கவும் மாநில அரசுக்கு உரிமை உண்டு. மீண்டும் சொல்லுகிறேன் மாநில அரசுக்கு அந்த உரிமை உண்டு.

நாடாளுமன்றத்தில் அறிவிப்பு!

மத்திய தகவல் ஒளிபரப்பு மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் அனுராக் தாகூர், திமுக நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.ஆர்.பார்த்திபன் எழுப்பிய கேள்விக்கு கடந்த மார்ச் 21ஆம் தேதி, பதிலளிக்கையில் பந்தயம் மற்றும் சூதாட்டமானது அரசியல் சட்டத்தில் ஏதாவது அட்டவணையில் உள்ள மாநில அதிகார பட்டியலில் 34ஆவது பிரிவில் இடம் பெற்றுள்ளதால், இது தொடர்பாக சட்டம் இயற்றும் அதிகாரம் மாநில அரசுகளுக்கு இருக்கிறது என்று மிகத் தெளிவாக நாடாளுமன்றத்தில் அறிவித்திருக்கிறார். மனசாட்சியை உறங்க செய்துவிட்டு எங்களால் ஆட்சி நடத்த முடியாது என்பதை பிரகடனமாகவே இந்த மாமன்றத்தில் தெரிவிக்க விரும்புகிறேன்” என்றார். 

இதையடுத்து, சட்டமன்ற உறுப்பினர்களின் விவாதத்தை அடுத்து, ஆன்லைன் சூதாட்டம் தடை சட்ட முன்வடிவு மசோதா, சபாநாயகரால் குரல் வாக்கெடுப்பு நடத்தப்பட்டு மீண்டும் நிறைவேற்றப்பட்டதாக அறிவிக்கப்படுகிறது. 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.