எம்.பி பதவி பறிப்பு: ராகுல் காந்திக்கு முன் உள்ள வாய்ப்புகள் என்னென்ன?

புதுடெல்லி: ராகுல் காந்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவி பறிக்கப்பட்டுள்ள நிலையில், மேல் நீதிமன்றம் தண்டனைக்கு தடை விதிப்பதன் மூலம் மீண்டும் நாடாளுமன்ற உறுப்பினராக முடியும் என சட்ட நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

தீர்ப்பின் பின்னணி: கடந்த மக்களவைத் தேர்தலின்போது, கர்நாடகாவின் கோலார் பகுதியில் 2019 ஏப்ரல் 13-ம் தேதி நடந்த பிரச்சாரக் கூட்டத்தில் பேசிய ராகுல் காந்தி, “ஏன் அனைத்து திருடர்களும் மோடி என்ற குடும்பப் பெயரையே கொண்டுள்ளனர். நீரவ் மோடி, லலித் மோடி, நரேந்திர மோடி என்று எல்லா திருடர்களின் பெயர்களும் மோடி என்றே முடிவது ஏன்?” என்று விமர்சித்திருந்தார்.

இது தொடர்பாக குஜராத்தை சேர்ந்த பாஜக எம்எல்ஏ புர்னேஷ் மோடி, சூரத் தலைமை நீதித் துறை மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ராகுல் காந்தி மீது அவதூறு வழக்குத் தொடர்ந்தார். சுமார் 4 ஆண்டுகள் நீடித்த இந்த வழக்கில், ராகுல் காந்திக்கு 2 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.15,000 அபராதமும் விதிப்பதாக மாஜிஸ்திரேட் எச்.எச்.வர்மா இன்று தீர்ப்பளித்தார். இதையடுத்து, ராகுல் காந்தி தரப்பில் ஜாமீன் கோரப்பட்டது. இதை ஏற்றுக் கொண்ட மாஜிஸ்திரேட் வர்மா, அவருக்கு 30 நாள் ஜாமீன் வழங்கி, அதுவரை தண்டனையை நிறுத்திவைக்க உத்தரவிட்டார். ராகுல் காந்தியின் வழக்கறிஞர் பாபு கூறும்போது, “இந்த தீர்ப்பை எதிர்த்து, உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வோம். நீதித் துறையின் மீது எங்களுக்கு நம்பிக்கை இருக்கிறது” என தெரிவித்திருந்தார்.

பறிபோன எம்.பி. பதவி: இந்த வழக்கில் குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட ராகுல் காந்தியின் எம்.பி பதவி பறிக்கப்பட்டுள்ளது. இது குறித்து மக்களவைச் செயலாளர் உத்பல் குமார் சிங் வெளியிட்டுள்ள அறிவிக்கையில், ”குற்றவியல் வழக்கில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் ராகுல் காந்திக்கு எதிராக சூரத் நீதிமன்றம் 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நேற்று தீர்ப்பளித்துள்ளது. எனவே, மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் 1951-ன் பிரிவு 102(1)(e)-ன் கீழ் கேரளாவின் வயநாடு தொகுதி மக்களவை உறுப்பினர் எனும் நிலையில் இருந்து ராகுல் காந்தி தகுதி நீக்கம் செய்யப்படுகிறார். அவரது தகுதி நீக்கம் தீர்ப்பு வெளியான நாளில் (23.03.2023) இருந்தே அமலுக்கு வந்துள்ளது” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ராகுல் முன் உள்ள வாய்ப்புகள்: ராகுல் காந்தி முன் உள்ள சட்ட வாய்ப்புகள் குறித்து கருத்து தெரிவித்துள்ள உச்ச நீதிமன்ற மூத்த நீதிபதியும், காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர்களில் ஒருவருமான கபில் சிபல், ”ராகுல் காந்திக்கு 2 ஆண்டு சிறை தண்டனை எப்போது விதிக்கப்பட்டதோ அப்போதே அவர் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இழந்துவிட்டார். இதுதான் சட்டத்தின் நிலை. அவர், இந்த தீர்ப்பை எதிர்த்து மேல் முறையீடு செய்ய முடியும். மேல்முறையீட்டில் நீதிமன்றம், இந்த தீர்ப்பை நிறுத்திவைத்தால் மட்டும் போதாது. கீழ் நீதிமன்றம் அளித்த தீர்ப்புக்கு தடை விதிக்க வேண்டும். அப்போதுதான் அவர் நாடாளுமன்ற உறுப்பினராக ஆக முடியும்” என்று கூறியுள்ளார்.

சூரத் நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து மேல் முறையீடு செய்ய காங்கிரஸ் திட்டமிட்டுள்ளது. இது குறித்து கருத்து தெரிவித்துள்ள காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரும் உச்சநீதிமன்ற மூத்த வழக்கறிஞருமான அபிஷேக் மனு சிங்வி, ”கீழ் நீதிமன்றம் அளித்த தீர்ப்புக்கு மேல் நீதிமன்றத்தில் தடை பெற முடியும் என்ற நம்பிக்கை இருக்கிறது. வரும் காலத்தில் நாங்கள் நிச்சயம் வெற்றி பெறுவோம்” என்று தெரிவித்துள்ளார்.

தற்போதைய சூழலில், ராகுல் காந்தி 2 ஆண்டுகள் சிறை தண்டனையை அனுபவிப்பதோடு, அடுத்த 6 ஆண்டுகளுக்கு அவர் தேர்தலில் நிற்பதற்கும் தடை ஏற்பட்டுள்ளது. எனவே, அவர் வரும் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட வேண்டுமானால், கீழ் நீதிமன்றம் விதித்த தீர்ப்புக்கு மேல் நீதிமன்றம் தடை விதிக்க வேண்டும். அவ்வாறு விதித்தால் மட்டுமே ராகுல் காந்தி வரும் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட முடியும் என்பதும் குறிப்பிடத்தக்கது. வாசிக்க > ராகுல் காந்தி தகுதி நீக்கம் | “சர்வாதிகாரம், ஜனநாயகப் படுகொலை, வரலாற்றின் கரும்புள்ளி” – எதிர்க்கட்சியினரின் எதிர்வினைகள்

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.