மகாத்மா காந்தி எந்த பல்கலைக்கழகத்திலும் படித்து பட்டம் பெறவில்லை: ஜம்மு காஷ்மீர் ஆளுநரின் கருத்தால் சர்ச்சை

போபால்: மகாத்மா காந்தி எந்த பல்கலைக்கழகத்திலும் படித்து பட்டம் பெறவில்லை என்று ஜம்மு காஷ்மீர் துணை நிலை ஆளுநர் மனோஜ் சின்கா பேசி இருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மத்தியில் ஆட்சி புரியும் பாஜக அரசு நியமித்துள்ள ஆளுநர்கள் சர்ச்சையான கருத்துக்களை பேசுவதையே வாடிக்கையாக வைத்துள்ளனர். தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி சனாதன கருத்துக்களை பேசி சர்ச்சையை ஏற்படுத்தி வரும் நிலையில் ஜம்மு காஷ்மீர் துணை நிலை ஆளுநரும் சர்ச்சையில் சிக்கியுள்ளார். மத்திய பிரதேச மாநிலம் குவாலிய நகரில் நடைபெற்ற டாக்டர் ராம் மனோகர் லோகியா நினைவு சொற்பொழிவு நிகழ்ச்சியில் பேசிய அவர்;

தேசத்தந்தையாக பார்க்கப்படும் மகாத்மா காந்தி சட்டம் படித்து பட்டம் பெற்றவர் என்பது தவறான தகவல் என்று கூறினார். உயர்நிலை பள்ளி பட்டய படிப்பை மட்டுமே பயின்ற அவர் வழக்கறிஞராக பணியாற்றினார் என்றும் தெரிவித்துள்ளார். காந்தி பட்டப்படிப்பு முடிக்கவில்லை என தைரியமாக யாரும் கேள்வி எழுப்ப முடியுமா என்றும் மனோஜ் சின்கா வினவினார். ஆதாரம் எதுவும் இல்லாமல் மனோஜ் சின்கா பேசியது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. ஆர்.எஸ்.எஸ். வழி வந்தவர்கள் காந்தியடிகளை சுட்டு கொன்ற நாதுராம் கோட்சேவுக்குத்தான் மரியாதை செலுத்துவார்கள் என்ற குற்றச்சாட்டை உறுதிப்படுத்தும் வகையில் ஆளுநரின் செயல்பாடு இருப்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.