விக்கிரவாண்டியில் பரபரப்பு : இறுதி சடங்கில் மின்சாரம் தாக்கி 15 பெண்கள் படுகாயம்.!

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள விக்கிரவாண்டி அருகே ஆவுடையார்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் குமரன் மகள் கயல்விழி. பனிரெண்டாம் வகுப்பு படித்து வரும் இவர் தேர்வுக்காக சரியாக படிக்காமல் இருந்ததாக அவருடைய தாய் கண்டித்துள்ளார்.

இதனால், மன உளைச்சலுக்கு ஆளான கயல்விழி நேற்று முன்தினம் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவலறிந்து வந்த போலீஸார் மாணவியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு பிரேத பரிசோதனை முடிந்த பின்னர் நேற்று மாணவியின் உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

இதையடுத்து உறவினர்கள் மாணவியின் உடலை இறுதி அஞ்சலிக்காக குளிர்பதன பெட்டியில் வைத்துள்ளனர். அப்போது பெண்கள் அந்த பெட்டியின் மேல் சாய்ந்தபடி கதறி அழுதுள்ளனர். அந்த நேரத்தில் பெட்டியில் இருந்து திடீரென அவர்களின் மீது மின்சாரம் பாய்ந்துள்ளது. 

இதனால், மொத்தம் 15 பெண்கள் அடுத்தடுத்து மயங்கி விழுந்தனர். இதைப்பார்த்த சக பெண்கள் அங்கிருந்து அலறியடித்து ஓடினர். இதைப்பார்த்து அங்கிருந்தவர்கள் ஓடிவந்து மின்சாரத்தைத் துண்டித்தனர்.

அதன் பின்னர் மின்சாரம் தாக்கியவர்களை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதற்கிடையே இந்த சம்பவம் குறித்து தகவலறிந்து வந்த போலீசார் சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
 

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.