இலங்கைக்கு தப்ப முயன்ற அகதி; உடந்தையாக இருந்த தமிழக மீனவர்கள் ஐந்து பேர் கைது!

இந்திய கடலோர காவல் படையினர் வழக்கமான ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது தனுஷ்கோடி அருகே மூன்றாம் மணல் திட்டில் சந்தேகத்திற்கிடமாக நின்ற நபரை பிடித்து மண்டபம் மரைன் போலீஸில் ஒப்படைத்தனர். விசாரணையில் இலங்கை வல்வெட்டித்துறையை சேர்ந்த ஜனகன் என்பதும், கடந்த 2010-ல் இலங்கையில் இருந்து இங்கிலாந்து சென்று அங்கு அகதியாக தன்னை பதிவு செய்து வேலை பார்த்து வந்ததுள்ளார் என்பதும் தெரிய வந்தது.

இந்நிலையில் இங்கிலாந்தில் இருந்து மீண்டும் இலங்கை திரும்புவதற்கான அனுமதி கிடைக்காததால் ராமேஸ்வரம் கடல் மார்க்கமாக கள்ளத் தோணியில் இலங்கைக்கு செல்ல திட்டமிட்டுள்ளார். அதற்காக விமானம் மூலம் சென்னை வந்து, அங்கிருந்து ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்திற்கு வந்துள்ளார்.

கைது செய்யப்பட்ட மீனவர்கள் ஐந்து பேர்

பின்னர் தனுஷ்கோடியில் இருந்து சிலர் பணத்தை வாங்கி கொண்டு சட்டவிரோதமாக ஜனகனை படகில் மூன்றாம் மணல் திட்டுவரை அழைத்து சென்று இங்கிருந்து இலங்கை கடற்படையினர் மீட்டு அழைத்துச் செல்வார்கள் என கூறி இறக்கி விட்டு வந்துள்ளது விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து ஜனகனை படகில் சட்டவிரோதமாக அழைத்துச் சென்றவர்கள் குறித்து மரைன் போலீசார் விசாரணை நடத்தினர்.

இதில் ராமேஸ்வரத்தை சேர்ந்த மீனவர்கள் சச்சின், ஆனந்த பாலன், ஜெகதீஷ், ஆதித்யநாத் ஆகியோர் ஜனகனிடம் ரூ.60 ஆயிரம் பெற்றுக் கொண்டு படகில் இலங்கையில் இறங்கி விடுவதாக கூறி இந்தியாவின் எல்லைக்குட்பட்ட மூன்றாம் மணல் திட்டில் இறக்கி விட்டது தெரியவந்தது. இதையடுத்து நால்வரையும் கைது செய்த மண்டபம் மரைன் போலீஸார் ராமேஸ்வரம் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி ராமநாதபுரம் சிறையில் அடைத்தனர். ஜனகனை புழல் சிறைக்கு பலத்த பாதுகாப்புடன் போலீஸ் வாகனத்தில் கொண்டு சென்றனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.