அதிமுக பொதுச் செயலாளராக இபிஎஸ் செயல்பட தடை விதிக்க கோரி உயர் நீதிமன்றத்தில் ஓபிஎஸ் தரப்பு மனு

சென்னை: அதிமுக பொதுக்குழு தீர்மானங்கள் செல்லும் என்ற தனி நீதிபதியின் உத்தரவுக்கு தடை கோரும் மேல்முறையீட்டு வழக்கில் உத்தரவு பிறப்பிக்கும் வரை அதிமுக பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி செயல்பட தடை விதிக்கக் கோரி ஓபிஎஸ் மற்றும் மனோஜ்பாண்டியன் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு ஜூலை 11-ம் தேதி நடந்த அதிமுக பொதுக்குழு கூட்டத்தில், ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் கலைக்கப்பட்டன. பொதுச்செயலாளர் பதவியை மீண்டும் கொண்டு வருவது எனவும், இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமியை நியமித்தும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மேலும், பன்னீர்செல்வம், வைத்தியலிங்கம், ஜே.சிடி.பிரபாகர் உள்ளிட்டோரை கட்சியில் இருந்து நீக்கியும் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை எதிர்த்தும், அதிமுக பொதுச் செயலாளர் பதவிக்கு அறிவிக்கப்பட்டுள்ள தேர்தலுக்கு தடை விதிக்கக் கோரியும் பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்கள் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில், வழக்குகள் தொடரப்பட்டன.

இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், ஒபிஎஸ் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. இந்த தீர்ப்பை ரத்து செய்யக் கோரியும், தீர்ப்புக்கு தடைவிதிக்கக் கோரியும் மேல்முறையீடு செய்ய இருப்பதாகவும், அந்த மனுக்களை அவசர வழக்காக விசாரிக்க வேண்டுமென பன்னீர்செல்வம் தரப்பினர் நீதிபதிகள் மகாதேவன், முகமது சபீக் ஆகியோர் அடங்கிய அமர்வில் ஓபிஎஸ் தரப்பினர் உடனடியாக முறையீடு செய்தனர்.

அந்த மனுக்களை நாளை விசாரிப்பதாக நீதிபதிகள் தெரிவித்துள்ள நிலையில், பன்னீர்செல்வம், மனோஜ் பாண்டியன் தரப்பில் உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. பன்னீர்செல்வம் சார்பில் வழக்கறிஞர் ராஜலட்சுமியும், மனோஜ் பாண்டியன் சார்பில் வழக்கறிஞர் இளம்பாரதியும் இந்த மனுக்களை தாக்கல் செய்துள்ளனர்.

இந்த மனுக்களில், “தனி நீதிபதியின் உத்தரவு முன்னுக்குப்பின் முரணாக உள்ளது. கட்சி விதிகளுக்கு எதிராக உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளனர். தனி நீதிபதியின் உத்தரவுக்கு தடை கோரும் இந்த மேல்முறையீடு வழக்கில் உத்தரவு பிறப்பிக்கும் வரை அதிமுக பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி செயல்பட தடைவிதிக்க வேண்டும். மேலும், தனி நீதிபதியின் உத்தரவுக்கு தடை விதிக்கவும்” என்று கோரிக்கை வைத்துள்ளனர்.

வைத்திலிங்கம் மற்றும் ஜே.சி.டி.பிரபாகர் ஆகியோர் புதன்கிழமை காலை மனு தாக்கல் செய்ய உள்ளனர். | வாசிக்க > அதிமுக பொதுக்குழு வழக்கு தீர்ப்பின் முக்கிய அம்சங்கள்

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.