ஆவின் தயிரில் இந்தி.?.. ‘தொலச்சிடுவேன்’ – முதல்வர் ஸ்டாலின் கொதிப்பு.!

ஆவின் தயிர் பாக்கெட்டுகளில் தாஹி என இந்தியில் அச்சிடவேண்டும் என்று ஒன்றிய அரசின் உணவு தரக்கட்டுப்பாட்டு ஆணையம் கடிதம் எழுதியதற்கு முதல்வர் ஸ்டாலின் எதிர்வினை ஆற்றியுள்ளார்.

FSSAI

FSSAI எனப்படும் இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தரக்கட்டுப்பாட்டு ஆணையம் என்ற அமைப்பு இந்தியாவில் உள்ள உணவு பொருட்களின் தரம் மற்றும் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக ஏற்படுத்தப்பட்டது. உணவு பொருட்களை பாக்கெட்டில் அடைத்து விற்பனை செய்யும் நிறுவனங்கள் FSSAI-இடம் ஒப்புதல் பெற வேண்டும்.

ஆவினில் இந்தி.?

இந்தநிலையில் ஆவின் நிறுவனம் விற்பனை செய்யும் தயிர் பாக்கெட்கள் மீது ’தயிர்’ என்று எழுதக் கூடாது. அதற்கு பதிலாக ‘தாஹி’ என்ற இந்தி சொல்லை எழுத வேண்டும் என FSSAI கட்டுப்பாடு விதித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்திற்கு மட்டுமல்லாமல். கர்நாடகாவில் நந்தினி, கேரளாவில் மில்மா ஆகிய பால் உற்பத்தியாளர் கூட்டமைப்பிற்கும் FSSAI கடிதம் அனுப்பியுள்ளது. மாநில மொழிச் சொற்களை பயன்படுத்தக் கூடாது எனவும் தாஹி என்ற இந்தி சொல்லை பயன்படுத்துங்கள் எனவும் அக்கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

கொதித்தெழுந்த ராமதாஸ்

இதற்கு தமிழகத்தை சேர்ந்த அரசியல் கட்சிகள் சார்பில் கண்டனம் தெரிவிக்கப்பட்டு வருகிறது. எதிர்ப்பு தெரிவித்து பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘‘FSSAI என்பது இந்தியை திணிக்க ஏற்படுத்தப்பட்ட அமைப்பு அல்ல. இதை அந்த அமைப்பின் பொறுப்பாளர்களும், இயக்குபவர்களும் உணர வேண்டும். ஆவின் நிறுவன தயிர் பாக்கெட்களில் தயிர் என்ற சொல் மட்டும் பயன்படுத்த அனுமதிக்க வேண்டும்.

தாஹி வேண்டாம். இதுதொடர்பாக எந்த நெருக்கடிக்கும் ஆவின் நிறுவனம் பணியக் கூடாது. இந்தியை இந்தியாகவே திணித்தால் தமிழர்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் என்பதால், இந்தி சொற்களை தமிழில் எழுதி திணிக்க மத்திய அரசு முயற்சிப்பதாகவே இதை பார்க்க வேண்டியுள்ளது. தமிழக அரசு இந்த சிக்கலில் என்ன நிலைப்பாடு எடுத்துள்ளது எனத் தெரியவில்லை’’ எனக் குறிப்பிட்டுள்ளார்.

அதேபோல் FSSAI கடிதத்திற்கு கர்நாடகா மற்றும் கேரளாவிலும் எதிர்ப்புகள் கிளம்பியுள்ளது. இது மத்திய அரசு நேரடி நடவடிக்கையாகவே பார்க்கப்படுகிறது. அதிகாரத்தை வைத்து கொண்டு மாநில மொழிக்கு பதிலாக இந்தியை திணிப்பது எந்த வகையில் நியாயம்? எனப் பலரும் கேள்வி எழுப்புகின்றனர்.

முதல்வரின் எதிர்வினை

இந்தநிலையில் தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலினும் தனது எதிர்ப்பையும், அரசின் நிலைப்பாட்டையும் வெளிபடுத்தியுள்ளார். இது குறித்து அவர் தனது ட்விட்டர் பதிவில், ‘‘எங்கள் தாய்மொழியைத் தள்ளிவைக்கச் சொல்லும் FSSAI, தாய்மொழி காக்கும் நாங்கள் சொல்வதைக் கேளுங்கள்!

மக்களின் உணர்வுகளை மதியுங்கள்! இந்தியை எங்கள் மீது திணிக்காதீர்கள். குழந்தையைக் கிள்ளிவிட்டுச் சீண்டிப் பார்க்கும் நயவஞ்சக எண்ணம் யாருக்கும் வேண்டாம்! தொட்டிலை ஆட்டும் முன்னர் தொலைந்துவிடுவீர்கள்!’’ என முதல்வர் தெரிவித்துள்ளார். அதேபோல், ‘‘ஆவின் தயிர் பாக்கெட்டுகளில் தாஹி என்ற சொல் அச்சிடப்படாது. ஒன்றிய அரசின் உணவு தரக்கட்டுப்பாட்டின் உத்தரவை தமிழ்நாடு அரசு ஏற்கவில்லை’’ என பால்வளத்துறை அமைச்சர் நாசர் தெரிவித்துள்ளார்.

பாஜகவின் இந்தி திணிப்பு

மத்தியில் பாஜக ஆட்சியமைத்தது முதலே மற்ற மொழி பேசும் மாநிலங்களில் இந்தியை திணித்து வருவதாக குற்றச்சாட்டு உள்ளது. ஒரே நாடு, ஒரே மதம், ஒரே மொழி என்பதே ஆளும் பாஜக அரசின் முக்கிய கொள்கையாக இருந்து வருகிறது. மத்திய அரசின் நிறுவனங்கள், ரயில் மற்றும் விமான நிலையங்களில் 100% இந்தியை நடைமுறைபடுத்த மத்திய அரசு சமீபத்தில் அறிவிப்பு வெளியிட்டது. இந்த சூழலில் FSSAI இத்தகைய நடைமுறையில் இறங்கியுள்ளது குறிப்பிடதக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.