”அரசியலிலிருந்து மதத்தை அப்புறப்படுத்திவிட்டால் வெறுப்புப் பேச்சுகள் ஓய்ந்துவிடும்” – உச்ச நீதிமன்றம் கருத்து

புதுடெல்லி: “முஸ்லிம்கள் உள்ளிட்ட சிறுபான்மையினருக்கு எதிரான வெறுப்புப் பேச்சுக்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் இருப்பது கண்டனத்துக்குரியது. வெறுப்பு எனும் தீய வளையத்தில் தேசம் சிக்கிக் கொண்டுள்ளது. இதற்குத் தீர்வு அரசியலிலிருந்து மதத்தை வெளியேற்றுவது மட்டுமே” என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

உச்ச நீதிமன்றத்தில் நேற்று நீதிபதிகள் கே.எம்.ஜோசப், பி.வி.நாகரத்னா அடங்கிய அமர்வு முன்னர் வெறுப்புப் பேச்சு தொடர்பாக மகாராஷ்டிரா அரசுக்கு எதிரான வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது மாநிலத்தில் நிகழும் வெறுப்புப் பிரச்சாரங்கள் பற்றி நீதிமன்றம் கேள்வி எழுப்பியது. அதற்குப் பதிலளித்த மத்திய அரசின் சொலிசிடர் ஜெனரல் துஷார் மேத்தா, “கேரளா, தமிழகத்தில் சில சம்பவங்கள் பற்றியும் இந்த நீதிமன்றம் கருத்தில் கொள்ள வேண்டும். தமிழகத்தில் திமுக செய்தித் தொடர்பாளர் ஒருவர், ‘அனைத்து பிராமணர்களும் அழிக்கப்பட்டாலே சமத்துவம் மலரும்’ என்று பேசுகிறார். அவர் மீது எவ்வித வழக்கும் பதிவாகவில்லை. அந்தக் கட்சிகூட அவர் மீது நடவடிக்கை எடுக்கவில்லை. அவர் இன்னும் அக்கட்சியின் செய்தித் தொடர்பாளராகத் தான் இருக்கிறார். அதேபோல் கேரளாவில் குழந்தை ஒன்று ‘இந்துக்களும், கிறிஸ்துவர்களும் தங்களின் இறுதிச் சடங்கிற்கு ஆயத்தமாக வேண்டும்’ என்று சொல்லவைக்கப்பட்டு அது வீடியோவாக பதிவு செய்யப்பட்டு பரப்பப்பட்டுள்ளது. குழந்தையின் அந்தப் பேச்சு நம்மை தர்மசங்கடத்திற்கு உள்ளாக்குகிறது” என்றார்.

அதற்கு நீதிபதி ஜோசப், “நாங்களும் அதை அறிவோம்” என்றார். அப்போது சொலிசிடர் ஜெனரல், “அப்படியென்றால் ஏன் இந்த நீதிமன்றம் அதைப் பற்றி தாமாக முன்வந்து விசாரிக்கவில்லை” என்று கேள்வி எழுப்பினார்.

அதற்குப் பதிலளித்த நீதிபதி கே.எம்.ஜோசப், “இந்த தேசம் வெறுப்பு எனும் தீய வளையத்தால் சூழப்பட்டுள்ளது. இதற்கு ஒரே தீர்வு அரசியலில் இருந்து மதத்தை தள்ளிவைப்பது மட்டுமே. அரசியலில் இருந்து மதம் அப்புறப்படுத்தப்படும் அந்தத் தருணம் இந்த வெறுப்புப் பேச்சுக்கள் எல்லாம் தடைபடும்” என்றார்.

ஆனால் சொலிசிடர் ஜெனரல் துஷார் மேத்தா, இல்லை. அரசியலுக்கும் வெறுப்புப் பேச்சுக்களுக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என்றார். நீதிபதியும் விடுவதாக இல்லை. “நிச்சயமாக வெறுப்புப் பேச்சுக்களுக்கும், மதம் மற்றும் அரசியலுக்கும் தொடர்பு இருக்கிறது. அரசியல்வாதிகள் மதத்தை பயன்படுத்திக் கொள்கின்றனர்” என்று நீதிபதி ஜோசப் கூறினார்.

நீதிபதி பி.வி.நாகரத்னம் பேசுகையில், “சகோதரத்துவம் என்ற நன்மதிப்பில் வெறுப்புப் பேச்சுக்கள் விரிசல்களை ஏற்படுத்தியுள்ளன. இந்த வெறுப்புப் பேச்சுக்களை மதம் சார்ந்த சில அமைப்புகள் உருவாக்குகின்றன.

வாய்பாயியும், நேருவும் பேசும்போது கிராமப்புற மக்கள் அதை செவிகொடுத்து கேட்பார்கள். ஆனால் இந்தக் காலத்தில் எவ்வித ஞானமும் இல்லாத சிறிய அமைப்புகள் எல்லாம் வெறுப்புப் பேச்சுக்களை கட்டவிழ்த்துவிடுகின்றன. இவர்கள் இந்தியாவை எங்கே இழுத்துச் செல்கிறார்கள்? வெறுப்புப் பேச்சுக்களுக்காக ஒவ்வொரு நபர் மீதும் அவமதிப்பு நடவடிக்கை எடுத்தால் இந்த நீதிமன்றம் தான் எதை நோக்கிச் செல்லும். பேச்சு சுதந்திரத்திற்கு ஏதும் கட்டுப்பாடு இல்லையா? மதிநுட்பம் இல்லாவிட்டால் இந்த தேசத்தை உலகின் நம்பர் 1 தேச தரத்திற்கு இட்டுச்செல்ல முடியாது. சகிப்பின்மை, அறிவின்மை, கல்வியின்மையால் மதி மயக்கம் ஏற்படும். இதை அகற்றுவதில் நாம் முதன்மை கவனம் செலுத்த வேண்டும். சமூகம் ஒட்டுமொத்தமும் இத்தகைய வெறுப்புப் பேச்சுக்களை புறக்கணிக்க உறுதி ஏற்க வேண்டும்” என்றார்.

அப்போது நீதிபதி ஜோசப், “வல்லரசாகும் முன்னர் நாம் சட்டத்தை மதிக்க வேண்டும். வெறுப்புப் பேச்சுக்கள் என்பவை கண்ணியத்தின் மீதான தாக்குதல். கண்ணியத்தின் மீது தொடர்ச்சியான தாக்குதல் நடக்கும்போதுதான், ‘பாகிஸ்தானுக்கு செல்லவும்’ போன்ற வெறுப்புப் பேச்சுக்கள் வெளியாகும். அவர்கள் தாமாகவே முன்வந்து இந்த தேசத்தை தேர்வு செய்தவர்கள். அவர்கள் உங்களின் சகோதரர்கள், சகோதரிகள். நீங்கள் பள்ளிக்கூடத்திலேயே ‘இந்தியர்கள் அனைவரும் எனது சகோதர, சகோதரிகள்’ என உறுதிமொழி ஏற்றீர்கள் என்பதை மறக்க வேண்டாம். எனக்கு 65 வயதாகிறது. நான் பழமையானவாக இருக்கலாம். இன்னும் 4 மாதங்களில் ஓய்வு பெறப்போகிறேன். ஆனால் 75 ஆண்டுகளுக்கு முன்னர் நாம் நம் தேசத்தின் பயணத்தைத் தொடங்கிய போது நம் இலக்கு சட்டத்தை மதிக்கும் தேசமாக இருக்க வேண்டும் என்பது மட்டுமே. ஆகையால் வெறுப்பு எனும் கீழ்நிலைக்கு நாம் இறங்கக் கூடாது” என்றார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.