வேலூர் ஹிஜாப் விவகாரம்: பாஜகவின் பாய்ண்ட் ஆஃப் வியூவ் என்ன.? – விளக்கும் நாராயணன் திருப்பதி.!

ஹிஜாப் மேட்டர்

பாஜகவின் மாநில துணைத் தலைவர் நாராயணன் தனது ட்விட்டர் பதிவில், ‘‘வேலூர் கோட்டையில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்த ஓர் பெண்ணையும், ஆணையும் சிலர் மிரட்டிய சம்பவம் அதிர்ச்சியளிக்கிறது. பொது இடத்தில் முறையற்று நடந்திருந்தால் முறையாக காவல்துறையினரிடம் புகார் கொடுத்திருக்கலாம். ஆனால் அவர்களை மிரட்டிய காட்சிகள் சமூக வலைதளத்தில் பரவியதையடுத்து தனிநபர் உரிமையில் தலையிட்டது குற்றம் என்ற பிரிவில் வழக்கு பதிந்து குற்றம் சாட்டப்பட்ட ஆறு பேரை கைது செய்துள்ளது காவல் துறை.

ஆனால், இந்த விவகாரத்தில் பிரச்சினையே அந்த பெண் ‘ஹிஜாப்’ அல்லது ‘புர்ஹா’ அணிந்து சென்றது தான் என்றும், புனிதமான புர்ஹாவை அகற்றி விட்டு செல்லலாம் என்றும் ஒரு இஸ்லாமிய பெண்ணை ஒரு ஹிந்து ஆண் அழைத்து வரலாமா என்றும் கேட்டு அந்த கும்பல் மிரட்டியதும், அந்த பெண் புர்ஹா அணிவது தன் உரிமை என்றும், அதை அகற்ற வேண்டும் என்று சொல்வதற்கு நீங்கள் யார்? என்றும் கேட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

இப்போதே ஜமாத்திற்கு சென்று திருமணம் செய்து கொள்கிறீர்களா? என்று கட்டாயப்படுத்தியதும், இது தனி மனித உரிமை குறித்த விவகாரத்தை தாண்டி மத ரீதியான மிரட்டல் என்பதே உண்மை. இதன் பின்னணியில் ஒரு இஸ்லாமிய அடிப்படைவாத அமைப்பு இருப்பதாக சொல்லப்படுகிறது.

காவல்துறைக்கு நன்றி

இந்த விவகாரம் குறித்த காணொளியை சமூக வலைத்தளங்களில் பரவவிடக்கூடாது என்று காவல் துறை கேட்டுக்கொண்டுள்ளது சரியாக இருந்தாலும், இது ஒரு தனிப்பட்ட நிகழ்வு என கடந்து சென்று விடாமல், இந்த மிரட்டலுக்கு காரணம் மத அடிப்படைவாதம் தான் என்பதையும், இதன் பின்னணியில் உள்ளது யார், எந்த அமைப்பு என்பதையும் காவல் துறை தெளிவுபடுத்த வேண்டும்.

கர்நாடகாவில் அனைவரும் சமம் என்பதை உணர்த்துவதற்கு ஹிஜாப் அணிவதை கல்வி கூடங்களில் தடை செய்த போது எகிறிக் குதித்த தமிழக அரசியல் கட்சிகள், வேலூர் கோட்டையில் நேரடியாக ஒரு பெண் மிரட்டப்பட்டு, ஹிஜாபை அகற்ற சொல்லிய விவகாரம் குறித்து கண்டனம் தெரிவிக்காமல் மௌனம் காப்பது ஏன்?

கர்நாடகாவில் கொதித்தவர்கள் இப்போது எங்கே.?

கர்நாடகாவின் ஹிஜாப் விவகாரத்தை பல நாட்கள் விவாதித்த தமிழக ஊடகங்கள் வேலூர் கோட்டையில் நடைபெற்றுள்ள அடிப்படைவாத கும்பலின் மிரட்டல் குறித்து விவாதிக்காமல் கடந்து செல்வது ஏன்? சிறுபான்மை வாக்கு வங்கி அரசியலுக்காக அமைதி காப்பது மதவாத அரசியல் பிழைப்பு தானே?

இந்த விவகாரத்தில் தமிழக காவல் துறை, குற்றம் சாட்டப்பட்டவர்களை கைது செய்துள்ளது பாராட்டத்தக்கது என்றாலும், மத நல்லிணக்கத்துக்கு ஊறு விளைவித்தல், சட்ட ஒழுங்கை சீர்குலைத்தல் போன்ற உரிய பிரிவுகளில் வழக்கு பதிய வேண்டும். மேலும், இந்த விவகாரத்திற்கு பின் தற்போது வேலூர் கோட்டையில் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.

ஆண், பெண் என இருவர் இணைந்து வந்தால் தடுத்து நிறுத்தப்படுகின்றனர் என்றும் சொல்லப்படுகிறது. வரும் முன் காக்காமல், வந்த பின் துன்புறுத்துவது நியாயமான நடவடிக்கை அல்ல. உடனடியாக இந்த கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட வேண்டும்.

உயிருக்கு ஆபத்து

மத அடிப்படைவாத சக்திகளால் வேலூர் கோட்டையில் அடையாளம் காணப்பட்ட பாதிக்கப்பட்ட மாணவருக்கும், மாணவிக்கும், அவர்களின் குடுபத்தினருக்கும் அச்சுறுத்தல் ஏற்படும் அபாயம் உள்ளதால், அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டிய கடமை காவல்துறைக்கும், தமிழக அரசுக்கும் உள்ளது. மேலும் பாதிக்கப்பட்ட மாணவன் மற்றும் மாணவியின் கல்வி இடைவிடாது தொடரவும் உறுதி அளிக்கப்பட வேண்டும்’’ என்று அவர் தெரிவித்துள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.