Awarness On Agniveer Job: இந்திய கடற்படை மற்றும் அக்னிவீர் திட்டம் குறித்து பள்ளி, கல்லூரி மாணவர்கள் ,பொதுமக்கள் இடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில் இந்திய கடற்படை அதிகாரிகள், வீரர்கள் ஐந்து குழுக்களாக கொல்கத்தா முதல் ஆந்திரா, தமிழ்நாடு வழியாக குஜராத் வரை கடற்கரைகளை ஒட்டி காரில் பயணம் மேற்கொண்டுள்ளனர்.
இதில் விசாகப்பட்டினம் முதல் திருநெல்வேலி வரை 1770 கிலோமீட்டர் பயணம் மேற்கொண்டுள்ள 36 பேர் கொண்ட குழு சென்னை அடையார் ஐஎன்எஸ் கப்பற்படை தளத்திற்கு இன்று (ஏப். 1) வருகை தந்தனர். ஐஎன்எஸ் தளத்தில் அவர்களுக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது.
பின் செய்தியாளர்களை சந்தித்து பேசிய கடற்படை அதிகாரி (காமண்டோ ஆபீசர்) சிவபிரகாஷ்,”இந்திய கடற்படை சார்பில் இந்தியாவின் வரலாறு, இந்திய கடற்படை மற்றும் அக்னிவீர் திட்டம் குறித்து பள்ளி கல்லூரி மாணவர்கள், பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில் கொல்கத்தா முதல் குஜராத் வரை 7500 கிலோமீட்டர் தூரம் 5 குழுக்களாக பயணம் செய்துள்ளனர். ஒரு குழுவில் 36 அதிகாரிகள் வீதம் கடந்த மார்ச் 26ஆம் தேதி பயணத்தை தொடங்கியது. சுமார் 25 நாட்கள் காரில் விழிப்புணர்வு பயணம் மேற்கொண்டுள்ளனர்.
கடற்படை அதிகாரி சிவபிரகாஷ் செய்தியாளர் சந்திப்பு:
தற்போது விசாகப்பட்டினம் முதல் திருநெல்வேலி வரை 1770 கிலோ மீட்டர் பயணம் மேற்கொண்டுள்ள குழு சென்னை வந்துள்ளது. இவர்கள் செல்லும் வழிகளில் பொதுமக்கள், பள்ளி, கல்லூரி மாணவர்கள் உள்ளூர்வாசிகளிடையே அக்னிவீர் திட்டம் குறித்தும், இந்திய கடற்படை செயல்கள் குறித்தும் இந்தியாவின் வரலாறு குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தி செல்கின்றனர். பெண் அதிகாரிகளும் இந்த பயண குழுவில் இடம் பெற்றுள்ளனர். இந்தியாவில் அக்னிவீர் திட்டத்தில் சேர மாணவர்கள் இளைஞர்களிடையே கடுமையான போட்டி நிலவுகிறது. 1 இடத்திற்கு 50 பேர் வரை போட்டி போடுகின்றனர்.