ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் – ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையேயான லீக் போட்டி நேற்று முன்தினம் சென்னை சேப்பாக்கத்தில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் முதலில் பேட் செய்த ராஜஸ்தான் அணி 175 ரன்கள் எடுத்தது. இதனையடுத்து களமிறங்கிய சென்னை அணி 172 ரன்கள் எடுத்து 3 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.
இந்தப் போட்டியில் ராஜஸ்தான் அணி வெற்றியை பெற்றபோதிலும், குறித்த நேரத்தில் பந்து வீசாமல் தாமதப்படுத்தியதாக அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. ஐபிஎல் நடத்தை விதிமுறைகளை மீறும் விதமாக ராஜஸ்தான் ராயல்ஸ் அணி முதல் முறையாக ஈடுபட்டுள்ளதால், அந்த அணியின் கேப்டன் சஞ்சு சாம்சனுக்கு ரூ. 12 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது.
இந்த நிலையில், சென்னை அணிக்கு எதிரான போட்டியின்போது கள நடுவர்களின் முடிவை, வெளிப்படியாக கருத்து தெரிவித்து விமர்சனம் செய்ததால் ராஜஸ்தான் அணியின் அஸ்வினுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
ஐபிஎல் நடத்தை விதிகளை மீறியதாக அவருக்கு போட்டி கட்டணத்தில் 25 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. பனிப்பொழிவு காரணமாக நடுவர்கள் பந்தை மாற்றியது தொடர்பாக அஸ்வின் கருத்து தெரிவித்தார்.