கொளுத்தும் வெயில்… பணி நேரத்தை மாற்ற உத்தரவு!!

கடுமையான வெப்பம் நிலவுவதால் தொழிலாளர்களை பாதுகாக்க முன்னேற்பாடுகளை மேற்கொள்ளுமாறு அனைத்து மாநிலங்களுக்கு ஒன்றிய அரசு அறிவுறுத்தியுள்ளது.

நாடு முழுவதும் இந்த ஆண்டு வெப்ப நிலை இயல்பை விட கூடுதலாக இருக்கும் என்ற இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அதனை சுட்டிக்காட்டி மத்திய தொழிலாளர் நலத்துறை செயலாளர் ஆர்த்தி அஹுஜா, அனைத்து மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள் மற்றும் தலைமைச் செயலாளர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார்.

அதில், தொழிலாளர்களின் பணி நேரத்தை மாற்றி அமைப்பது, பணியிடங்களில் குடிநீர் வசதி ஏற்படுத்தித் தருவது, அவசரகால முதலுதவி வசதிகள் அளிப்பது, சுகாதாரத் துறையுடன் இணைந்து தொழிலாளர்களுக்கு மருத்துவப் பரிசோதனையை உறுதி செய்வது போன்ற அறிவுறுத்தல்கள் இடம் பெற்றுள்ளன.

மேலும், மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள மருத்துவ வழிகாட்டுதல்களைப் பின்பற்ற வேண்டும் என மத்திய தொழிலாளர் நலத்துறை செயலாளர் ஆர்த்தி அஹுஜா கேட்டுக் கொண்டுள்ளார்.

இது தவிர, நிலக்கரி சுரங்கங்களில் பணிபுரிவோர் ஓய்வெடுப்பதற்கு அறைகள், பணியிடத்திற்கு அருகே போதுமான அளவு குளிர்ந்த நீர், நிலக்கரி சுரங்கங்களில் போதுமான காற்றோட்ட வசதிகள் உள்ளிட்டவை ஏற்படுத்தப்பட வேண்டும்.

ஆலைகள் மற்றும் சுரங்கங்கள் தவிர்த்து கட்டுமான பணிகளில் ஈடுபடும் தொழிலாளர்கள் மீதும் கூடுதல் கவனம் செலுத்துமாறு மத்திய தொழிலாளர் நலத்துறை செயலாளர் வலியுறுத்தியுள்ளார்.

newstm.in

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.