அமெரிக்காவில் ராகுல் – மக்களை அச்சுறுத்தும் பாஜக- விசாரணை ஏஜென்சிகளை துஷ்பிரயோகம் செய்வதாக சாடல்!

கலிபோர்னியா: இந்தியாவில் மத்தியில் ஆளும் பாஜக, பொதுமக்களை கடுமையாக அச்சுறுத்துகிறது; மத்திய அரசின் விசாரணை ஏஜென்சிகளை அரசியல் பழிவாங்கலுக்காக பயன்படுத்துகிறது என்று அமெரிக்கா சென்றுள்ள மூத்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.

2019-ம் ஆண்டு பிரதமர் மோடி குறித்த விமர்சனத்துக்காக குஜராத்தின் சூரத் நீதிமன்றம் ராகுல் காந்திக்கு 2 ஆண்டு சிறை தண்டனை விதித்தது. இவ்வழக்கில் ராகுல் காந்திக்கு ஜாமீன் வழங்கியது நீதிமன்றம். அப்போது எம்பி என்ற அடிப்படையிலான தமக்கு கொடுக்கப்பட்ட சிறப்பு கடவுச் சீட்டையும் நீதிமன்றத்தில் ராகுல் காந்தி நீதிமன்றத்தில் ஒப்படைத்தார்.

இதனையடுத்து 10 ஆண்டுகள் செல்லத்தக்க பாஸ்போர்ட் வழங்க கோரி டெல்லி உயர்நீதிமன்றத்தில் ராகுல் காந்தி ஒரு மனுத்தாக்கல் செய்தார். இம்மனுவுக்கு பாஜகவின் சுப்பிரமணியன் சுவாமி எதிர்ப்பு தெரிவித்தார். அதாவது ராகுல் காந்தி மீது தாம் தொடர்ந்த நேஷனல் ஹெரால்டு வழக்கு நிலுவையில் உள்ளது. ராகுல் காந்தி வெளிநாடு செல்வதால் இவ்வழக்கு விசாரணை பாதிக்கும் என சுப்பிரமணியன் சுவாமி கூறியிருந்தார். இவ்வழக்கில் ராகுல் காந்திக்கு 3 ஆண்டுகள் செல்லக் கூடிய பாஸ்போர்ட் வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதனடிப்படையில் பெறப்பட்ட புதிய பாஸ்போர்ட்டுடன் ராகுல் காந்தி அமெரிக்கா சென்றடைந்தார். அங்கு அவருக்கு உற்சாக வரவேற்பளிக்கப்பட்டது.

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய ராகுல் காந்தி, இந்தியாவில் ஆளும் பாஜக, மக்களை அச்சுறுத்துகிறது. மத்திய அரசின் கீழ் உள்ள விசாரணை ஏஜென்சிகளை அரசியல் லாபங்களுக்காக துஷ்பிரயோகம் செய்கிறது. இதற்கு எதிராகவே பாரத் ஜோடா யாத்திரை நடத்தப்பட்டது என்றார்.

மேலும் உங்களுக்கு வன்மம், கோபம், வெறுப்பு, அகங்காரம் ஆகியவற்றின் மீது நம்பிக்கை இருந்தால் பாஜகவின் கூட்டத்தில் உட்கார முடியும் என்றார் ராகுல் காந்தி.

ஏற்கனவே இங்கிலாந்து சென்ற போது ராகுல் காந்தி, நாடாளுமன்றம் தொடர்பாக முன்வைத்த விமர்சனங்கள் பெரும் சர்ச்சையாக வெடித்தது. ராகுல் காந்தி மன்னிப்பு கேட்க வேண்டும் என்று நாடாளுமன்றத்தின் லோக்சபா, ராஜ்யசபாவில் பாஜகவினர் வலியுறுத்தி இருந்தனர். இதற்கு காங்கிரஸ் தலைமையில் அனைத்து எதிர்க்கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்து நாடாளுமன்றத்தை முடக்கி, நாடாளுமன்ற வளாகத்தில் போராட்டங்களை நடத்தி இருந்தனர். இதனால் ஒட்டுமொத்தமாக நாடாளுமன்ற நடவடிக்கைகள் முடங்கி இருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.

Source Link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.