இது நடந்தால்.. ஸ்டாலினை தமிழ்நாட்டுக்குள் விட மாட்டோம்.. அண்ணாமலை பகிரங்க எச்சரிக்கை

சென்னை:
தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் கர்நாடகாவில் நடைபெறவுள்ள எதிர்க்கட்சிகள் கூட்டத்தில் பங்கேற்கக் கூடாது. மீறி பங்கேற்றால் அவரை தமிழ்நாட்டுக்குள் விட மாட்டோம் என பாஜக தலைவர் அண்ணாமலை எச்சரித்துள்ளார்.

கர்நாடகாவில் அண்மையில் நடந்த சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் அமோக வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது. முதல்வராக சித்தராமையாவும், துணை முதல்வராக டி.கே. சிவக்குமாரும் பதவியேற்றுள்ளனர்.

இந்நிலையில், நேற்று பெங்களூரில் செய்தியாளர்களிடம் பேசிய டி.கே. சிவக்குமார், “காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டாலும் தமிழகத்துக்கு தண்ணீரை திறந்துவிட முடியாது. எங்களுக்கே தண்ணீர் போதவில்லை. பிறகு எப்படி தமிழகத்துக்கு தண்ணீர் கொடுக்க முடியும்?” என்று அவர் கூறினார்.

டி.கே. சிவக்குமாரின் இந்த பேச்சு தமிழக மக்களுக்கு பெரும் அதிர்ச்சியை கொடுத்தது. மேலும், மேகதாது அணையை கட்டுவதிலும் கர்நாடகா உறுதியாக உள்ளதாக டிகே சிவக்குமார் தெரிவித்ததும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில், இந்த விவகாரம் குறித்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அனல் பறக்க பேசியுள்ளார். அவர் கூறுகையில், “நடப்பாண்டு தமிழ்நாட்டிற்கு தண்ணீர் தர மாட்டோம் என கர்நாடகா துணை முதல்வர் சிவக்குமார் கூறியிருக்கிறார். எனவே, ஜூலை 11-இல் கர்நாடகாவில் நடக்கும் எதிர்க்கட்சிகள் கூட்டத்தில் தமிழக முதல்வர் ஸ்டாலின் பங்கேற்கக் கூடாது. அப்படி அவர் அந்தக் கூட்டத்திற்கு சென்றால் அவர் மீண்டும் தமிழகத்திற்குள் வர முடியாது. நாங்கள் விட மாட்டோம். முதல்வரே.. நீங்கள் எப்படி கோட்டைக்குள் செல்கிறீர்கள் என பார்ப்போம்” என அண்ணாமலை பேசியுள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.