சபாநாயகரின் அறிவித்தல்

2023.06.29 அன்று நடைபெற்ற அரசாங்க நிதி பற்றிய குழுக் கூட்டத்தில் எதிர்க்கட்சித் தலைவர் கலந்துகொண்டதாகவும், இதன்போது அவருக்கு கருத்துத் தெரிவிக்க சந்தர்ப்பம் வழங்கப்படவில்லை எனவும் எதிர்க்கட்சித் தலைவர் மற்றும் எதிர்க்கட்சியின் முதற்கோலாசான் ஆகியோரால் 2023.06.30 அன்று நடைபெற்ற பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுக் கூட்டத்தின் போதும் 2023.07.01 அன்று பாராளுமன்ற சபையிலும் தனது கவனத்துக்குக் கொண்டுவந்ததாகவும், அது தொடர்பில் தன்னிடம் தீர்மானமொன்றை கோரியிருந்ததாகவும் சபாநாயகர் கௌரவ மஹிந்த யாப்பா அபேவர்தன அவர்கள் இன்று (05) பாராளுமன்றத்தில் அறிவித்தார்.

இது தொடர்பில் நிலையியற் கட்டளைகள் மற்றும் பாராளுமன்ற மரபுகள் தன்னால் ஆய்வு மேற்கொள்ளப்பட்டதாகவும் அதற்கமைய, பாராளுமன்ற சபாநாயகர், பிரதி சபாநாயகர், குழுக்களின் பிரதித் தவிசாளர், சபை முதல்வர் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் ஆகிய பதவிகளுக்கு பாராளுமன்றக் கட்டமைப்புக்குள் சிறப்புரிமைகள் காணப்படுகின்றமையினாலும் இந்தப் பதவிகளை வகிக்கும் கௌரவ உறுப்பினர்களுக்குக் குழுக்களின் அலுவல்கள் தொடர்பில் தகவல்களைப் பெற்றுக்கொள்வதற்கு ஒரு பரந்த இடம் காணப்படுகின்றமையினாலும், அரசாங்க நிதி பற்றிய குழுவின் தலைவர் பதவிக்கு நிலையியற் கட்டளைகள் 121(1) இன் பிரகாரம் எதிர்க்கட்சி உறுப்பினர் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளதாலும், இவ்வாறான கூட்டங்களுக்கு எதிர்க்கட்சித் தலைவரோ அல்லது மேலே குறிப்பிடப்பட்ட பொறுப்பான பதவி வகிப்பவர்களை அழைப்பது பொருத்தமற்றது என்பதால் குறித்த கூட்டத்தின் தகவல்களை எதிர்க்கட்சித் தலைவருக்கு வழங்குவதற்குக் குழுவின் தலைவரினால் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என சபாநாயகர் சபைக்கு வலியுறுத்தினார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.