‘திருச்சிற்றம்பலம்’ படத்திற்கு பின் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் தனுஷ் நடிக்கும், அவரது ஐம்பதாவது படமான ‘டி 50’யின் படப்பிடிப்பு நேற்று ஆரம்பமாகியுள்ளது. தனுஷே அதனை இயக்குகிறார். இதற்கிடையே விஜய்யின் ‘லியோ’வில் தனுஷ் நடிக்கிறார் என்கிற தகவல் வைரலாகப் பரவிக் கொண்டிருக்கிறது.

தனுஷ் இயக்கி, நடிக்க உள்ள ‘D50’ படம் வட சென்னையை மையப்படுத்தும் கேங்க்ஸ்டர் படம் என்கிறார்கள். ஐம்பதுக்கும் மேலான குடிசை வீடுகள் சூழ்ந்த ஒரு ஏரியாவை அரங்கம் அமைக்க சில மாதங்களாக இடம் தேடி வந்தனர். ஒரு பெரிய கிராமத்தையே செட் அமைக்க வேண்டியிருப்பதால் சரியான இடம் எங்கும் அமையாமல் போனது. இதனால் ஈசிஆரில் உள்ள ஸ்டூடியோ ஒன்றில் அரங்கம் அமைக்கும் பணி நடந்து வந்தது. ‘D50’ அறிவிப்பு வெளியானதும், அந்த படம் குறித்த தனுஷின் புரொமோ வீடியோ ஒன்றும் படமாக்கினார்கள். ‘கேப்டன் மில்லர்’ சமயத்தில் அடுத்த புராஜெக்ட் பற்றி அறிவித்தால் சரியாக இருக்காது என்பதால், அந்த ப்ரோமோ வீடியோ வெளியீட்டை சற்று தள்ளி வைத்துள்ளனர் என்கிறார்கள்.
இப்போது துவங்கி உள்ள படப்பிடிப்பில் தனுஷ், எஸ்.ஜே.சூர்யா, சந்தீப்கிஷன் ஆகியோரின் காட்சிகள் படமாக்கப்பட்டது என்றும், கமிஷனர் ஆபீஸ் அலுவலக செட்டப்பில் அரங்கில் படமாக்கி வருகிறார்கள். தொடர்ந்து ஒரு வாரம் வரை எஸ்.ஜே.சூர்யாவின் காட்சிகள் படமாக்குவார்கள் எனத் தெரிகிறது. தனுஷே இயக்கி வருகிறார். ‘டி.50’ படத்தில் துஷாரா, அபர்ணா பாலமுரளி, காளிதாஸ் ஜெயராம் ஆகியோரும் விரைவில் பங்கேற்பார்கள் என்கிறார்கள்.

இதற்கிடையே கமலின் ‘விக்ரம்’ படத்தில் ‘ரோலக்ஸ்’ ஆக சூர்யா கௌரவ வேடத்தில் நடித்ததைப் போல, ‘லியோ’வில் தனுஷை நடிக்க வைக்க முயன்றிருக்கிறார்கள். இது குறித்து தனுஷிடமும் பேசி உள்ளதாக சொல்கிறார்கள். ஆனால், தனுஷ் ‘டி 50’யை இயக்கி நடிக்கும் வேலையில் முழு வீச்சாக இறங்கி விட்டார் என்றும் ‘கேப்டன் மில்லர்’ படத்தின் டப்பிங் வேலைகளும் இருக்கிறது என்றும் இதனால் அவர் லோகேஷிடம் உறுதி எதுவும் அளிக்கவில்லை என்றும் சொல்கிறார்கள்.