சென்னை: 2023-24 கல்வி ஆண்டுக்கான எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியலை தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று வெளியிட்டார். இதில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கான ஒதுக்கீட்டில் சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த மாணவி கிருத்திகா 569 மதிப்பெண்களுடன் முதலிடம் பிடித்துள்ளார்.
2023–24 ஆம் ஆண்டின் மருத்துவம் (MBBS) மற்றும் பல் மருத்துவம் (BDS) ஆகிய படிப்புகளுக்கான அரசு மருத்துவ இடங்கள், சுயநிதி மருத்துவக் கல்லூரிகளில் உள்ள அரசு மருத்துவ இடங்கள், சுயநிதி மருத்துவப் கல்லூரிகளில் உள்ள நிர்வாக மருத்துவ இடங்களில் சேருவதற்கான விண்ணப்பங்கள் இணையதளம் மூலம் 28.06.2023 முதல் வரவேற்கப்பட்டு 12.07.2023 விண்ணப்பங்கள் சமர்ப்பிக்க இறுதி நாளாக அறிவிக்கப்பட்டது.
மொத்தம் 40,200 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. இது கடந்த ஆண்டைக் காட்டிலும் 3994 அதிகம். இதில் 7.5% அரசு பள்ளி மாணவர்களின் உள் ஒதுக்கீட்டிற்கு 3042 விண்ணப்பங்களும், விளையாட்டு பிரிவுக்கு 179 விண்ணப்பங்களும், முன்னாள் படைவீரர் பிரிவு ஒதுக்கீட்டிற்கு 401 விண்ணப்பங்களும் மற்றும் மாற்றுதிறனாளிகள் ஒதுக்கீட்டு பிரிவுக்கு 98 விண்ணப்பங்களும் பெறப்பட்டன.
பெறப்பட்ட விண்ணப்பங்களை பரிசீலனை செய்து மருத்துவம் (MBBS) மற்றும் பல் மருத்துவம் (BDS) படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியலும் மற்றும் 7.5% அரசு பள்ளி மாணவர்களின் உள் ஒதுக்கீட்டுக்கான பட்டியலும் ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 16 ) வெளியிடப்பட்டது.
இந்த தரவரிசைப் பட்டியலில் அரசுப் பள்ளி மாணவர்கள் ஒதுக்கீட்டில், சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த மாணவி கிருத்திகா 569 மதிப்பெண்கள் பெற்றும் முதலிடத்தைப் பிடித்துள்ளார். தருமபுரி மாவட்டத்தைச் சேர்ந்த மாணவர் பச்சையப்பன் 565 மதிப்பெண்களுடன் இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளார். பொது கலந்தாய்வில் விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த மாணவன் பிரபஞ்சன் 720-க்கு 720 மதிப்பெண்ணுடன் முதலிடத்தையும் பிடித்துள்ளார்.