மகளிர் உரிமைத் தொகை முகாம்: தருமபுரியில் ஸ்டாலின் தொடங்கி வைப்பு!

தமிழ்நாட்டில் மகளிருக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கும் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம் செப்டம்பர் 15ஆம் தேதி தொடங்கப்பட உள்ளது. இந்த திட்டத்தில் ஒரு கோடி பயனாளிகளை இணைக்க திட்டமிடப்பட்டுள்ளது.

அந்த வகையில் வீடு வீடாக சென்று விண்ணப்ப படிவங்கள் கொடுக்கும் பணி நடைபெற்று வருகிறது. அந்தந்த ரேஷன் கடைகளில் ஜூலை 24ஆம் தேதி முதல் சிறப்பு முகாம்கள் நடத்தி பயனாளிகளின் விண்ணப்பங்கள் பதிவு செய்யப்படும்.

இந்த சிறப்பு முகாமை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தரும்புரியில் தொடங்கி வைக்கிறார். இது தொடர்பாக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

அதில், “மகளிர் முன்னேற்றத்தில் பெரும் பாய்ச்சலாக அமையவுள்ள கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தைச் சுற்றியே என் எண்ணங்கள் உள்ளன. தகுதி வாய்ந்த மகளிர் ஒருவர்கூட விடுபடாமல் இந்தத் திட்டம் போய்ச் சேர வேண்டும். இதற்கான விண்ணப்பங்கள் வழங்கும் பணி ஏற்கனவே தொடங்கிவிட்டது.

வீடு வீடாக சென்று டோக்கன் விநியோகம் !

தமிழ்நாட்டு மகளிரின் முன்னேற்றத்தில் பெரும் பங்காற்றும் மகளிர் சுய உதவிக்குழுக்கள் திட்டம் 1989-ஆம் ஆண்டு முத்தமிழறிஞர் கலைஞர் ஆட்சிக்காலத்தில் தொடங்கப்பட்ட அதே தருமபுரி மண்ணில், கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்திற்கான முகாமை வரும் திங்கட்கிழமை (24-07-2023) தொடங்கி வைக்கிறேன்.

தமிழ்நாடு முழுவதும் நடைபெறும் இந்த முகாம்களை மாண்புமிகு அமைச்சர்கள் அனைவரும் சென்று பார்வையிட வேண்டும் என இன்றைய அமைச்சரவைக் கூட்டத்தில் அறிவுறுத்தியுள்ளேன்.

கலைஞர் 100-இல் செயல்படுத்தப்படும் இந்தத் திட்டம், ஒரு தலைமுறையையே மாற்றக் கூடிய திட்டம் மட்டுமல்ல; பல தலைமுறைகளைத் தாண்டியும் பயனளிக்கக் கூடிய திட்டமாக விளங்கும் என எண்ணித் துணிகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.