அண்ணாமலையின் பொய் பிம்பம் விரைவில் உடையும்… அந்தர்பல்டி அடித்த திருச்சி சூர்யா!

திமுக மூத்த தலைவர்களில் ஒருவரான திருச்சி சிவாவின் மகன் திருச்சி சூர்யா. கடந்த ஆண்டு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை முன்பு அக்கட்சியில் இணைந்தார். பாஜகவில் இணைந்த திருச்சி சூர்யாவுக்கு மாநில அளவில் பொறுப்பு வழங்கப்பட்டது.

தொடர்ந்து சமூக வலைதளங்களில் திமுகவை விமர்சித்து பதிவிட்டு வந்தார் திருச்சி சூர்யா. இந்நிலையில் பாஜக பெண் நிர்வாகியான டெய்சி சரணை திருச்சி சூர்யா ஆபாசமாக பேசிய ஆடியோ வெளியானதை தொடர்ந்து அவர் மீது கட்சி நடவடிக்கை பாய்ந்தது. 6 மாதங்கள் அவர் பாஜகவில் இருந்து நீக்கப்பட்டார்.

இதையடுத்து பாஜகவில் இருந்து விலகினார் திருச்சி சூர்யா. கட்சியில் இருந்து விலகிய பின்னரும் கூட தமிழக பாஜக தலைவரான அண்ணாமலைக்கு தனது ஆதரவை தெரிவித்து வந்தார். இந்நிலையில் தற்போது திருச்சி சூர்யா பதிவிட்டுள்ள டிவிட் ஒன்று பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அதவாது, கட்சியை விட்டு வெளியில் வந்தாலும் அண்ணாமலை பற்றி நான் விமர்சனம் செய்யாமல் தான் இருந்தேன். வாழ்க்கையில் ஒரு விஷயம் அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டும் நாம் உண்மையாக இருப்பதைவிட யாரிடம் உண்மையாக இருக்கிறோம் என்பது மிக முக்கியம். நாம் கொடுக்கும் முக்கியத்துவத்தை அவர்கள் முதலில் உணர வேண்டும். நான் அப்படிப்பட்ட ஒரு நபர் அண்ணாமலை என்று நினைத்தேன். ஆனால் அது பொய் என்று தெரிந்து விட்டது கூடிய விரைவில் அவருடைய பொய் பிம்பம் உடையும் என பதிவிட்டுள்ளார்.

அண்ணாமலையை விமர்சிப்பவர்களை சரமாரியாக சாடி வந்த திருச்சி சூர்யா தற்போது அண்ணாமலைக்கு எதிராக திரும்பியிருப்பது தமிழக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே பாஜகவில் இருந்து நீக்கப்பட்ட காயத்ரி ரகுராம் அண்ணாமலையை கடுமையாக சாடி வருகிறார். இதேபோல் பாஜக மூத்த தலைவரான எஸ்வி சேகரும் அண்ணாமலையை விமர்சித்து வருகிறார். இந்நிலையில் அந்த பட்டியலில் தற்போது திருச்சி சூர்யாவும் இணைந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.