பெஷாவர்: பாகிஸ்தான் நாட்டின் வடக்கு பகுதியில் உள்ள கைபர் பக்துன்வா மாகாணத்தின் பஜுர் மாவட்டத்தில் நடைபெற்ற அரசியல் கட்சி மாநாட்டில் ஏற்பட்ட குண்டு வெடிப்பில் 40 பேர் பலி, 200-க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஜமியத் உலமா இஸ்லாம்-ஃபஸ்ல் (JUI-F) என்ற கட்சி சார்பில் கார் தாலுகாவில் நடைபெற்ற இந்த மாநாட்டில் குண்டு வெடிப்பு நிகழ்ந்துள்ளது. இதில் அந்த காட்சியை சார்ந்த முக்கிய பிரமுகர் ஒருவரும் உயிரிழந்துள்ளதாக தகவல். மாநாடு நடைபெற்ற பகுதிக்குள் இந்த குண்டு வெடிப்பு நிகழ்ந்துள்ளது. தற்கொலை படை மூலம் இந்த சம்பவம் அரங்கேற்றப்பட்டுள்ளது என பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த குண்டு வெடிப்புக்கு இதுவரை எந்த அமைப்பும் பொறுப்பு ஏற்கவில்லை. சம்பவ இடத்துக்கு அருகாமையில் அமைந்துள்ள மருத்துவமனைகளில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளதாக தகவல். குண்டு வெடிப்பில் மோசமாக காயமடைந்தவர்களை ஹெலிகாப்டர் மூலம் பெஷாவர் கொண்டு சென்று சிகிச்சை வழங்கப்படுவதாக அந்த மாகாணத்தின் அமைச்சர் ஃபிரோஸ் ஷா ஜமால் தெரிவித்துள்ளார்.
இந்த சூழலில் தங்கள் கட்சி உறுப்பினர்கள் அமைதி காக்க வேண்டும் என்றும், இதுகுறித்து முறையான விசாரணை வேண்டும் என்றும், காயமடைந்தவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்க வேண்டுமென ஜமியத் உலமா இஸ்லாம்-ஃபஸ்ல் கட்சியின் தலைவர் மௌலானா ஃபஸ்லுர் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.