சென்னை: Marimuthu (மாரிமுத்து) ஜோதிடத்திற்கு எதிராக பேசிய எதிர்நீச்சல் மாரிமுத்துவுக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பப்பட்டிருக்கிறது
கண்ணும் கண்ணும், புலிவால் ஆகிய படங்களை இயக்கியவர் மாரிமுத்து. அவர் இயக்கிய இரண்டு படங்களுமே சுமாரான வரவேற்பையே பெற்றன.அதனையடுத்து மிஷ்கின் இயக்கிய யுத்தம் செய் படத்தில் நடிகராக அறிமுகமானார்.முதல் படத்திலேயே தனது எதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்திய மாரிமுத்துவுக்கு தொடர்ந்து பட வாய்ப்புகள் குவிந்தன. அதன்படி இப்போது முன்னணி குணச்சித்திர நடிகராக வலம் வந்துகொண்டிருக்கிறார்.
எதிர்நீச்சல்: அதேபோல் சின்னத்திரையிலும் ஒரு கலக்கு கலக்கிவருகிறார் மாரிமுத்து. சன் டிவியில் ஒளிபரப்பாகும் எதிர்நீச்சல் சீரியலில் ஆதி குணசேகரன் என்ற கேரக்டரை ஏற்றிருக்கிறார். ஆணாதிக்க சிந்தனையுடனும், எப்போதும் திமிராகவும் இருக்கும்படி வடிவமைக்கப்பட்டிருந்த அந்த கேரக்டரை மாரிமுத்து தனது நடிப்பின் மூலம் உச்சக்கட்டத்துக்கு எடுத்து சென்றுவிட்டார். அந்தக் கதாபாத்திரத்திற்கு என்று பலர் ரசிகர்களாக இருக்கின்றனர்.
என்ன பேசினார்?: இந்தச் சூழலில் தனியார் சேனல் ஒன்றில் நடந்த விவாத நிகழ்ச்சியில் கலந்துகொண்டார் மாரிமுத்து. அது ஜோதிடர்கள் vs ஜோதிடத்தை நம்பாதவர்கள் என்ற தலைப்பில் நடந்தது. அப்போது பேசிய மாரிமுத்து, “இந்தியாவை பின்னோக்கி இழுப்பதே இந்த ஜோதிடக்காரர்கள்தான். தமிழ்நாட்டின் தற்போதைய முதலமைச்சர் முதல்வராக முடியாது என இந்தியாவில் உள்ள ஜோசியக்காரனும் சொன்னான். ஆனால் அவர் முதலமைச்சராகிவிட்டார். இப்போது முகத்தை தூக்கி எங்கே வைத்துக்கொள்வீர்கள்” என பல விஷயங்களை ஜோதிடத்திற்கு எதிராக அதிரடியாக பேசினார். அவரது பேச்சு இணையத்தில் ட்ரெண்டானது.
வக்கீல் நோட்டீஸ்: இந்நிலையில் ஜோதிடத்திற்கு எதிராக பேசியதால் மாரிமுத்துவுக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பப்பட்டிருக்கிறது. பழ.ஆறுமுகம் என்பவர் அனுப்பியிருக்கும் அந்த நோட்டீஸில், “கடந்த 23ஆம் தேதி அன்று பிரபல ஜி தமிழ் தொலைக்காட்சியில் தமிழா தமிழா நிகழ்ச்சியில் ஜோதிடம் பற்றிய கருத்து நிகழ்ச்சி ஒளிபரப்பப்பட்டது. இந்த நிகழ்ச்சிக்கு தமிழகத்தில் உள்ள ஜோதிடர்கள், நடிகர் மாரிமுத்து, நடிகைகள் அர்ச்சனா மற்றும் நளினி மற்றும் ஜோதிடம் எதிர் கருத்து உடையவர்கள் மற்றும் பார்வையாளர்கள் கொண்டு நிகழ்ச்சி ஒளிபரப்பப்பட்டது.
அதிர்ந்துபோனேன்: மாரிமுத்து ஜோதிடர்கள் அனைவரும் மன்னிக்க முடியாத குற்றவாளி என்றும் ஜோதிடர்கள் தான் இந்தியாவை பின்னோக்கி இழுத்து செல்வதற்கு முக்கியாமான காரணம் என்றும் உன்மைக்கு புறம்பாக பொய்யான குற்றசாட்டுகளை ஆதாரம் இன்றி பேசியதை தொலைகாட்சி நிகழ்ச்சியை பார்த்து அதிர்ந்து போனேன்.
பொய்யான குற்றச்சாட்டுக்கள்: மாரிமுத்து, ஜோதிடத்தை பற்றி பொய்யான குற்றசாட்டுகளை ஆதாரமின்றி பேசியதால் மனம் புண்பட்டுள்ளது. இதனால் மாரிமுத்துவின் அவதூறு பேச்சு காலம் காலமாக பின்பற்றி வரும் ஜோதிட ஆராய்ச்சிகள் மற்றும் ஜோதிட நம்பிக்கைக்கு எதிராகவும் ஜோதிடர்கள் இந்தநாட்டின் வாழ தகுதியற்றவர்கள் என்பது போல் தீய எண்ணத்திலும் அவதூறு பரப்பி பேசியது மக்கள் மத்தியில் ஜோதிடர்கள் மற்றும் ஜோதிடத்தின் மேல் உள்ள நம்பிக்கை நீர்த்து போகும் அளவுக்கு இருக்கிறது.
நடவடிக்கை: இந்த நோட்டிஸ் கண்ட 15 தினங்களுக்குள் ஜி தமிழ் தனியார் தொலைக்காட்சியில் அவதூறு பேசியது குறித்து மாரிமுத்து உரிய விளக்கம் அளிக்க வேண்டும். தவறும் பட்சத்தில் அவர்மீது சிவில் மற்றும் கிரிமினல் வழக்கு தொடரப்படும்” என குறிப்பிடப்பட்டுள்ளது.